ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

விடுதலைப்புலிகளின் தளபதி ராமின் மச்சான் சுட்டுக் கொலை !

தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட இராணுவத் தளபதி ராமின் மச்சான் கந்தப்போடி எருவில் பகுதியில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

யாழ்.மிருசுவில்லில் ౩ பிள்ளைகளின் தாய் சுட்டுக் கொலை !

யாழ்ப்பாணம் மிருசுவில் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான நாகராசா சுசீலா நேற்று அதிகாலை துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவசரகால சட்ட விதியில் திருத்தம் - கைதானவர்களைத் தடுத்து வைக்கலாம்.

ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானவரென கருதப்படுவோரை பாதுகாப்பு படையினர் அவசரகால சட்ட விதிகளுக்கமைய கைது செய்யலாம், ஆனால் இவர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்த வேண்டும் எனும் சரத்தும் அதில் அடங்கி உள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைதாவோரை நீதிமன்றில் வழக்குத் தொடராமல், குற்றச்சாட்டு எதனையும் தாக்கல் செய்யாமல், ஒன்றரை வருட காலத்துக்கு தடுத்து வைக்கலாம் எனும் வகையில் அவசரகாலச் சட்ட விதியில் திருத்தம் செய்யும் பொருட்டு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி வெளியான அரச வர்த்தமானி மூலம் ஜனாதிபதியால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சனி, 6 செப்டம்பர், 2008

வவுனியா விவசாயிகள் சங்க தலைவர் சுட்டுக் கொலை !

வவுனியா பம்பைமடு விவசாயிகள் சங்கத் தலைவரான 45 வயதுடைய பொன்னர் மகேந்திரன் கடந்த 2008.09.04 ஆம் திகதி இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு பம்பைமடு பாடசாலைக்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் விமானக் கொள்வனவாளரான சிங்களவர் தாய்லாந்தில் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைக்குத் தேவையான ஸ்லின் 143 ரக விமானங்களை கொள்வனவு செய்தவரான சுஜி குணபால தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா கொண்டு வரப்பட்டுள்ளார். சுஜி குணபாலவின் அம்மாவின் தாய்மொழி தமிழும், அப்பா தாய்மொழியாக சிங்களமும் முன்னாள் பொலிஸ் அதிகாரியும் ஆகும்.

ஒரு வருடத்திற்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்குத் தேவையான ஸ்லோக் மற்றும் ஹெல்னர் என்டிகோச் கைத்துப்பாக்கி மற்றும் 45 ஆயிரம் தோட்டாக்களை கொள்வனவு செய்ய முயன்ற போது தாய்லாந்து மெரைன் பொலிஸாரினால் சுஜி குணபால கைதாகி, ஆயுதக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு உட்பட்டிருந்தார்.

2002 பெப்ரவரியில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்கா அரசாங்கமும் இணைந்து யுத்தநிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தி ஒன்றரை வருட காலத்தின் பின்னர் மூன்று இலகுரக விமானங்கள் கப்பல் மூலம் முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக குணபால வாக்குமூலம் அளித்துள்ளார்.

வியாழன், 4 செப்டம்பர், 2008

திருமலையில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இரு குழுவினர் கைது !

திருகோணமலைப் பகுதியில் ஆட்கடத்தல், கப்பம் பெறுதல், கொலை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டுவந்த திருகோணமலை, வவுனியா, நுவரெலியா, மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 12 பேர் கொண்ட இரண்டு குழுவினரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் சந்தேகத்தின் பேரில் கைதாகிய மேலும் இரு பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்திற்கான பொலிஸ் அத்தியட்சகர் ஏ. பி.ஜி.லால் குணவர்த்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கிருபராஜா தலைமையில் ஒரு குழுவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (பிள்ளையான் குழு) உறுப்பினர் நகுலனின் தலைமையில் ஒரு குழுவும் புத்தளத்தைச் சேர்ந்த ஈழமாறனின் வழிநடத்தலில் இயங்கிய இவர்களுக்கு, இடம்பெற்ற 14 ஆட்கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதாக அறியமுடிகின்றது.

இச் சந்தேக நபர்களிடம் இருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள், சிம் காட்கள், இரு கணினிகள், ஒரு தற்கொலைக் குண்டு அங்கி உட்பட பெருமளவு பொருட்கள் மீட்கப்பட்டன.

வவுனியா வந்துள்ள புதுக்குடியிருப்பு மக்கள் !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மாத்தளன் கரையோரப் பகுதில் வசித்து வந்த யாழ்ப்பாணம் மயிலீட்டியைச் சேர்ந்த 18 பேர் வவுனியா பூந்தோட்ட நலன்புரி நிலையத்துக்கு வந்துள்ளதாக வவுனியா புனர்வாழ்வுத் திட்டப் பணிப்பாளர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வன்னி போருக்கு முகம் கொடுக்க முடியாமல் உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக 2008.08.26 ஆம் திகதி மாத்தளனில் இருந்து 3 படகுகளில் புறப்பட்டுச் சென்ற போது நடுக்கடலில் கடற்படையினரால் மீட்கப்பட்டு திருமலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் வீட்டுக்கு வீடு பதுங்குகுழி கட்டாயம் புலிகள் அறிவிப்பு !

வன்னியில் போர் உக்கிரமடைந்து வருவதால் ஸ்ரீலங்கா படை தரப்பிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலும் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயங்களுக்கும் இலக்காகி உள்ளனர்.

இந்த நிலையில் வன்னி மக்களிடம் வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகளை அமைக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கோரியுள்ளனர். உண்ண உணவின்றி பொருளாதார நெருக்கடியில் சிக்கி போரின் கோரத்துக்குப் பயந்து ஓடிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் பதுங்கு குழி அமைக்கத் தேவையான மூலப் பொருட்களின்றி அல்லலுறுகின்றனர்.

வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகள் அமைப்பது மட்டுமல்லாமல் பொது மக்கள் கூடக்கூடிய சந்தை, மைதானம், சந்தி போன்ற இடங்களிலும் பதுங்கு குழிகள் உடனடியாக அமைக்குமாறு விடுதலைப் புலிகள் மக்களை கேட்டுள்ளனர்.

புதன், 3 செப்டம்பர், 2008

வன்னிப் போர்முனையில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் !

ஸ்ரீலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வன்னிப் போர்முனையில் உக்கிர மோதல் இடம்பெற்று வருகின்றது, அம் மோதலில் ஸ்ரீலங்கா படையினரிடமிருந்து பெருந் தொகையான இராணுவ தளபாடங்களைக் கைப்பற்றியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
















நன்றி தமிழ்வின்

கல்முனையில் ஸ்டாலினின் தாயார் சுட்டுக்கொலை !

ஸ்ரீலங்கா கல்முனை பிரதேசத்தின் பாண்டிருப்பு சோமநாதர் தெருவில் நேற்றிரவு 10 மணியளவில் 60 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான பனிமலர் ராஜலக்ஷ்மி இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ஸ்டான்லியின் தாய் இவரெனவும், இக் கொலைச் சம்பவத்துக்கும் நேற்று முன் தினம் திருக்கோவில் பிரதேசத்தில் கொல்லப்பட்ட வாவி என்பவரின் கொலைக்கும் தொடர்பு இருக்கலாமென தகவல்கள் கூறுகின்றன.

மறு கண்ணையும் தோண்டிய நவீன கண்ணப்பன் !

கர்நாடகா மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தின் அடகா கிராமத்தினைச் சேர்ந்த 55 வயதுடைய முதுகப்பா எல்லப்பா கரடி என்பவர் சங்கராஜ சுவாமிகள் மீது கொண்ட பக்தியினால் கடந்த 2008.08.28 ஆம் திகதி அதிகாலையில் தனது வலது கண்ணைத் தோண்டி கடவுளுக்கு படையல் செய்தார் கண்ணப்ப நாயனார் பாணியில் அமைந்த நவீன கண்ணப்பன்.

இவர் வைத்தியசாலையில் வலது கண்ணின்றி காயத்துக்குச் சிகிச்சை பெற்றுவரும் இந் நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் தனது இடது கண்ணையும் தோண்டி எடுத்துள்ளார்.

வைத்தியசாலை கட்டிலில் இருந்தபடியே இடது கண்ணைத் தோண்டி கையில் வைத்திருந்த எல்லப்பாவின் கண்ணை மீண்டும் பொருத்த முடியுமா என்று வைத்தியர்கள் ஆலோசித்து வருகின்றார்கள்.

கண்ணை பொருத்த முடியாதென்றே சில வைத்தியர்கள் கூறியதாக அறிய முடிகின்றது.

செவ்வாய், 2 செப்டம்பர், 2008

காளையுடன் விளையாட்டு !

அமெ.வெள்ளை மாளிகைக்கென வாக்கெடுப்பில் தெரிவான நாய் !

நாய்க்கு இருக்கும் கிராக்கி இப்போது மனிதருக்கு இல்லை. அமெரிக்க வெள்ளை மாளிகைக்கான நாயாரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அண்மையில் இடம்பெற்றது.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வெள்ளை மாளிகைக்குச் செல்லும் போது அவருக்கு நண்பனாக, குடும்ப உறுப்பினராக வளர்க்கக் கூடிய "காலி" என செல்லமாக அழைக்கப்படும் திரு நாயாரை "அமெரிக்க நாய்கள் வளர்ப்புக் கழகம்" தேசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்துள்ளது.

வாக்கெடுப்பில் 42,000 வாக்காளர்கள் கலந்து கொண்ட போதிலும், அதிகப்படியான வாக்குக்களைப் பெற்று "காலி" முன்னிலையில் உள்ளது. வெற்றி பெற்ற நாயாரே படத்தில் காணப்படுபவராகும்.

நாயை உயர்திணையில் கௌரவம் செய்யவேண்டியதாகி விட்டதே !

திங்கள், 1 செப்டம்பர், 2008

வன்னி மனித அவலத்தை நீக்குவது எப்படி?

வன்னியில் இடம்பெற்று வரும் ஸ்ரீலங்கா படை நடவடிக்கையினால் அங்கு வாழும் மக்கள் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளும், அவர்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் கஷ்டமுறுகின்றார்கள், உணவு, மருந்து போன்றனவுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன் தங்க வசதியுமின்றி மரத்தின் கீழேயே தங்குவதாகவும், இவர்களுக்கு தற்காலிக கொட்டகைகளுமின்றி அவதியுறுவதாகக் கூறி வருகின்றார்கள், ஆனால் நிர்க்கதியான நிலையில் இருந்து இவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று கூற மறந்து விட்டனர்.

வன்னி மக்களை ஸ்ரீலங்கா கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருமாறு ஸ்ரீலங்கா படையினர் துண்டுப் பிரசுரம் மூலம் தெரிவித்துள்ளனர், ஆனால் அங்குள்ள மக்கள் வெளியேற முடியாமல் விடுதலைப் புலிகளிடம் சிக்கி இருப்பதனை ஊடகங்கள் எழுத தயங்குகின்றன.

வன்னியில் இருந்து இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிக்கு ஒருவர் வரவேண்டுமெனில் விடுதலைப் புலிகளிடம் அனுமதி பெற வேண்டும், இப்போது இராணுவ நடவடிக்கை சூடு பிடித்திருப்பதால், வெளிப் பிரதேசத்துக்குச் செல்லுவதற்கான அனுமதி புலிகளால் மறுக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப் புலிகளுக்குத் தெரியாமல் அவர்களின் அனுமதியின்றி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சிலர் வந்திருந்தாலும் கூட, உயிரோடு விளையாடும் முயற்சியாகவே கருதப்படுகின்றது. திருட்டுத்தனமாக வந்து கைது செய்யப்படுபவர்கள் சண்டை இடம்பெறும் முன்னணி நிலைகளுக்கு விடுதலைப் புலிகளினால் கொண்டு செல்லப்படுகின்றார்கள்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் செல் வீச்சுக்களுக்கும், விமானக் குண்டுத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க முடியாமல் திக்குமுக்காடி நிற்கும் வன்னி மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதற்காக இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களோ அல்லது ஆதரவாளர்களோ கிடையாது.

வன்னிப் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களுக்கான தடைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அகற்றி அவர்களை வெளியே செல்ல அனுமதிப்பதன் மூலம் அங்கு ஏற்படவிருக்கும் பாரிய மனித அவலத்தைத் தடுக்கலாம்.

அடாவடித்தன ஆட்சியாளர்களாக தெற்கில் மேர்வின் சில்வாவும், கிழக்கில் பிள்ளையானும்!

புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் ஊடகங்களில் ஒன்றான "டான் தமிழ்அலை" செய்மதி வானொலி மூலமாக சனிக்கிழமை இரவு வேளையில் "உறவுப்பாலம்" எனும் நேரடி விவாதக்களமொன்றினை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த உறவுப்பாலத்துக்கு இலங்கையில் இருக்கும் குறித்த அரசியல்வாதியிடம் உலகம் வாழ் தமிழர்கள் தொலைபேசியூடாக வினாக்களைத் தொடுக்கலாம், அதற்கு தொலைபேசி மூலமாக பதிலிறுப்பார்கள் என அறிய முடிகின்றது.

இது தொடர்பாக கடந்த வாரம் ஈபிஆர்எல்எவ் திரு.இ.துரைரெட்ணம் நேயர்களின் திறந்த வினாக்களுக்கு உடனேயே பதில் தெரிவித்திருந்தார், அதேபோன்று நேற்று முன்தினம் உறவுப்பாலத்திற்காக, நேயர்களின் தொலைபேசி மூலமான வினாக்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு பிள்ளையான் சந்திரகாந்தன் பதிலளித்திருந்தார்.

அவரின் பதிலில் அதிரடி இணையத்தளத்தை விமர்சித்து இருந்தாரென காரணங்காட்டி இன்று அதிரடி இணையத்தளம் பதிவொன்றை இணைத்துள்ளது.

கடந்த காலங்களில் பிள்ளையானின் அடாவடித்தனங்கள் அதிகரித்து வருவது எல்லோரும் அறிந்ததே, ஆனால் அரசாங்கத்தின் கோடரிக்காம்பாக அவர் இருப்பதால் நினைப்பதெல்லாவற்றையும் அவரால் அரங்கேற்ற முடிகின்றது, தெற்கில் அடாவடித்தன ஆட்சியாளர் ஒரு மேர்வின் சில்வாவெனில் கிழக்கிலும் அடாவடிதன ஆட்சியாளராக ஒரு பிள்ளையான் என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரபல்யமாக இருக்கின்றார் கிழக்கின் முதலமைச்சர். இதனை எழுத ஊடகங்களும் பயந்து வருகின்றன, அண்மையில் வீரகேசரி, தினக்குரல், தினமுரசு மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கான தடையும் துப்பாக்கியூடான அச்சுறுத்தலும் பிள்ளையானால் கிழக்கில் ஏற்படுத்தப்பட்டதாகும். கடந்த மாதம் தினமுரசு விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் பிள்ளையான் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிந்ததே!

ஒரு சமூகத்தின் பொறுப்புமிக்க ஒரு நபர் ஊடகங்களூடான விவாதங்களில் கலந்து கொள்ளும் போது காத்திரமாகப் பதிலிறுக்க வேண்டும்.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

இலவச இணையத் தளமும், இலவச ஈமெயில் கணக்கும் !

இணையத் தளமும், அவ் இணையத்தளத்தின் பெயருடன் கூடிய ஈமெயில் கணக்கினையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ள http://www.cydots.com/ உதவுகின்றது.

http://www.cydots.com/ சென்று xx.blogspot.com எனும் வலைப்பூவை xx.net.ms என்று பெயர் மாற்றம் செய்து y@xx.net.ms என ஈமெயில் எனும் கணக்கினையும் வைத்துக்கொள்ள http://www.cydots.com/ உதவுகின்றது.

உ-ம்: எனது வலைப்பதிவு களத்துமேடு இதனை http://www.ekalamm.net.ms/ என்று பெயரை மாற்றி eelavan@ekalamm.net.ms எனும் ஈமெயில் கணக்கினையும் வைத்துள்ளேன்.

இலவசமாக இத் தளம் உள்ளதால் நீங்கள் விரும்பினால் செய்து பார்க்கலாமே!

சனி, 30 ஆகஸ்ட், 2008

கண்ணைத் தோண்டிக் கடவுளுக்கு படையல் செய்த நவீன கண்ணப்பன் !

முற்காலத்தில் காளாத்தியப்பருக்கு கண்ணிரண்டையும் கொடுத்தார் கண்ணப்ப நாயனார், இது கதையா, கற்பனையா என்று விவாதக் களங்கள் உருவாகியுள்ள இக் காலத்தில், நவீன கண்ணப்பராக இந்திய பாகல்கோட்டை மாவட்டத்தின் பாதாமி தாலுகாவில் உள்ள அடகல் கிராமத்தைச் சேர்ந்த 41 வயதுடைய முதுகப்பா உருவெடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் வீரபத்ரேசுவரா சுவாமிகள் கனவில் வந்து "முதுகப்பா உனது கண்ணை எனக்கு படையல் செய்" எனக் கேட்டதற்கிணங்க, உடனே சங்கரையா மடத்திலுள்ள வீரபத்ரேசுவரா கோவிலுக்குச் சென்ற முதுகப்பா தனது வலது கண்ணைத் தோண்டியெடுத்து சிலைக்கு படையல் செய்துள்ளார்.

நம்பவே முடியாமல் இருக்கின்றதல்லவா, ஆம் இப்போது முதுகப்பா பாகல்கோட்டை அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டு வருகின்றார்.

நல்லூர் கந்தனின் தீச்சட்டி மீது வீழ்ந்த பக்தர்கள் !

யாழ். நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவான 24ஆம் நாளாகிய நேற்று தேர்வீதி உலா வந்து முருகனை கீழே இறக்கிய போது ஏற்பட்ட சனநெரிசலில் தீச்சட்டியின் மீது பக்தர்கள் தவறி விழுந்ததில் பதினொரு பேர் தீக்காயங்களுக்கு இலக்காகினர்.

தீக்காயங்களுக்குள்ளாகியோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

..


..



தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டோர் விபரம்:
  1. ஏ.அருண்ராஜ் - 18 வயது - நல்லூர்
  2. எஸ்.சபேசன் - 8 வயது - கந்தர்மடம்
  3. ஆர்.குகேந்திரமாலா - 13 வயது - இணுவில்
  4. என்.வினேதீஸ்வரன் - 27 வயது - இணுவில்
  5. என்.தில்லைச்சிவன் - 27 வயது - இணுவில்
  6. எஸ்.ஜெககாந்தினி - 26 வயது - கொக்குவில்
  7. ஐ.ரதீஸ்வரன் - 36 வயது - நவாலி
  8. எஸ்.ஸ்ரீதரன் - 36 வயது - மானிப்பாய்
  9. பி.கொலிஸன் - 24 வயது - மானிப்பாய்
  10. கே.யோகமலர் - 57 வயது - சுன்னாகம்
  11. எஸ்.அரியமலர் - 53 வயது - வட்டுக்கோட்டை

மட்டு. சிறைச்சாலையில் குண்டுத் தாக்குதல் !

மட்டக்களப்பு சிறைச்சாலையினுள் நேற்று காலை நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் கைதிகளாக இருந்த ஈபிடிபி உறுப்பினர்கள் ஐவரும் மேலும் இருவருமாக ஏழு பேர் காயமைடைந்துள்ளதாகவும், அச் சம்பவத்தில் ஈழமாறன் ரவி என்பவர் கையை இழந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பிள்ளையான் குழுவினரே இக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக ஈபிடிபியினர் குற்றம் சாட்டிய போதிலும் எவராவது கைது செய்யப்பட்டதாக அறிய முடியவில்லை. தங்களால் இத் தாக்குதல் நடத்தப்படவில்லையென ரிஎம்விபியினரின் ஊடகப் பேச்சாளர் மௌலானா பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையினுள் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் காரணிகளை கண்டு பிடிக்க விசாரணை நடைபெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஈபிடிபி இனர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை:


கிழக்கில் வேலியே பயிரை மேய்கிறது அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
ஊடக அறிக்கை 28.08.2008

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் பெயரால் எமது உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எமக்கான நியாயமும், நீதியும் கிடைக்குமென நாம் நம்புகின்றோம். எமது அரசியல் செயற்பாடுகளை மட்டக்களப்பிலிருந்து அகற்றும் நோக்கத்தோடு காலத்துக்குக் காலம் எம்மீது பலவிதமான வன்முறைகளை சமூக விரோதிகள் புரிந்துவருவதை எமது மக்கள் அறிவார்கள்.

இதன் தொடர்ச்சியாக அண்மையில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த எமது நீண்ட கால உறுப்பினர் தோழர் அப்பாஸ் சுடப்பட்டதையும் மக்கள் அறிவார்கள்.

வாழைச்சேனையில் எமது உறுப்பினரான தோழர் சீலன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும், அதுகுறித்து இன்றுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எமது உறுப்பினர்களைக் கடத்தியது அஜித் தலைமையிலான ரி.எம்.வி.பி.யினர்தான் என்பதை நாம் குறிப்பிட்டிருந்தோம். இந்த விடயத்தில் தமது தலையீட்டை அரசியல் செல்வாக்குச் செலுத்தித் தப்பித்துக் கொண்டுள்ளனர்.

இத்தகைய அதிகார துஷ்பிரயோகமானது நீதி, நியாயம் கிடைக்கவிடாது, கிழக்கில் அச்சச் சூழலையே தோற்றுவித்துள்ளது. இத்தகைய பயங்கரமான சூழலின் பின்னணியிலேயே 29.08.2008 அன்று மட்டக்களப்பு சிறையில் நடந்த கைக்குண்டு வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 6.30 மணிக்கு சிறையில் இருப்பவர்களை இயற்கை கடமைகளுக்காக திறந்துவிடும் வழக்கமான நேரத்திலேயே எமது உறுப்பினர்கள் மீது திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் செங்கலடியின் பொறுப்பாளர் தோழர் ரவி (தர்மரெட்ணம் ஈழமாறன்), தோழர் சேகர் (வீரகுட்டி சேகர்), தோழர் ஜெயகுமார் (யோகராசா ஜெயகுமார்), தோழர் விஜய் (மகேந்திரராஜ் - வினோதராஜ்), தோழர் விஜி (கோவிந்தன் - பிரதீப்), ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்களுடன் இருவர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு நிறைந்த சிறைக்குள்ளேயே இத்தாக்குதல் நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கில் இருக்கும் குறைபாடுகளையே இது கோடிட்டுக் காட்டுகிறது. எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சியையே மக்கள் கொண்டிருக்கின்றனர்.

இத்தாக்குதலை நடத்திய ரி.எம்.வி.பி. உறுப்பினரை எமது உறுப்பினர்கள் பார்த்துள்ளனர். எனினும் அது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? இத்தகைய சூழலையா கிழக்கின் விடுவிப்பும் - ஜனநாயகம் என்றும் நம்புகின்றோம் என்று மக்களின் கேள்விகளுக்கு என்ன பதிலளிக்க முடியும். சட்டம், ஒழுங்கைச் செயற்படுத்த வேண்டியவர்கள், ஒரு குறிப்பிட்ட தரப்பை பாதுகாக்க செயற்படுகின்றனர்.

அப்படியாயின், அப்பாவிப் பொதுமக்களையும், அரசியல் சக்திகளையும் பாதுகாக்க வழியேதுமில்லையா? நீதிக்காகக் காத்திருப்போரை சிறையிலேயே கொலை செய்யும் கொடூரம்தான் கிழக்கின் தற்போதைய அரசியல் போக்காக மாறி இருக்கிறது.

மக்களே! அரசியல் பலத்தையும், ஆயுதப் பின்னணியையும் கொண்டு, மக்களை அடக்கி ஒடுக்கி காட்டு ராஜ்ஜியம் நடத்த எத்தனிக்கப்படுகின்றது. இந்த நிலையானது சட்டியிலிருந்து அடுப்பில் வீழ்ந்த கதையாகிவிட்டிருக்கிறது. மக்களையும், மக்கள் சேவகர்களையும், வன்முறையைப் பிரயோகித்து அடிமைப்படுத்த நினைக்கும் சக்திகளின் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஊடகச் செயலாளர்
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----