41,685 பேர் இன்று பரவலாக மீள்குடியேற்றம்!, ஸ்ரீலங்கா கடலில் வைத்து இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்படும் கொடூர வீடியோ பதிவு!, வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்குமிடையிலான சந்திப்பு!, இலங்கை வலைப்பதிவர் சந்திப்பும் இணையவழி ஒலிஒளிச் சீர்கேடும்!, நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தலும் கூடவே குடிகொண்டுள்ள பிரதேசவாதமும்!, வலது குறைந்தோருக்கான சர்வதேச தினமும் அரச பேரினவாதமும்! .....

இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு - 2, சில ஆரம்பக் காட்சிகள்!






இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு - 2 ஆரம்பமாகி விட்டது, மதுவதனனின் அறிமுகத்துடன் பதிவர்களின் ஸ்நேகம் தொடர்கின்றது.

இதில் சிறப்பம்சமாக இணைய வழி சந்திப்பில் கலந்து கொள்ளும் பதிவர்களையும் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஒலியமைப்பில் சீர் செய்துள்ளமை வரவேற்கத்தக்கது.

சில ஆரம்பக் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

Watch live streaming video from srilankatamilbloggers at livestream.com


வலது குறைந்தோருக்கான சர்வதேச தினமும் அரச பேரினவாதமும்!

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வலது குறைந்தோருக்கான சர்வதேச தினம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதம அதிதியாகக் கொண்டு அலரி மாளிகையில் நடைபெற்றது, டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமாவும் மற்றும் இன்னோரன்ன அதிதிகளும் கலந்து கொண்டு வலது குறைந்தோருக்கான இந் நிகழ்வைச் சிறப்பித்திருந்ததாக ஊடகச் செய்திகள் படங்களுடன் செய்திகளைப் பதிவேற்றி இருந்தன.

முப்பது ஆண்டு கால போய் ஓய்ந்து விட்டதென முரசம் கொட்டிக் கொண்டிருக்கும் அரச பேரினவாதமும் அதன் ஏவலாளர்களும், இந்தப் போரின் எச்சங்களாக வலது குறைந்து எஞ்சியிருக்கும் மக்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்டியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும், இன்னும் இதற்கு அப்பால் சென்று முகாம்களில் சித்தசுவாதீனமுற்று, வலது குறைந்து நிர்க்கதியாக முடங்கிப் போயுள்ள தமிழ் உள்ளங்களைப் பார்த்து நேசக்கரத்தினை நீட்டினால் குதூகலமாக இருந்திருக்கும் அல்லவா?

இந்த நிகழ்வை நடத்திய அமைச்சரே தமிழராக இருப்பதால், எமது மக்களின் ஊனமான நிலையை உலகுக்கு உரத்துக் கூற அருமையான சந்தற்பமாக இது அமைந்திருக்கும், அமைச்சு சார் நிகழ்வுகள் தமிழருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல இலங்கை வாழ் சகலருக்கும் தேவையானதென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை, ஆனால் இன்றைய சூழலில் வலது குறைந்து நிர்க்கதியாக அழுது கொண்டிருக்கும் மக்களென்றால் நிவாரணக் கிராமங்களில் வாழும் எமது மக்கள் மாத்திரமே!

"ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம்"

படம்- 1
படம்- 2

நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தலும் கூடவே குடிகொண்டுள்ள பிரதேசவாதமும்!

நோர்வே நாட்டில் வாழும் சில தமிழர்கள் இணைந்து "நோர்வே ஈழத் தமிழர் அவை" எனும் நாமத்தில் நேற்று 2009.12.15 ஆம் திகதி தேர்தலை நாடாத்தினர்.

"# வன்னி வதை முகாம்களில், நாளும் இன்னலுறும் எம்முறவுகளின் இன்னல்களைப் போக்கிடச் சர்வதேச சமூகத்திடம் உரிமையுடன் குரல் கொடுக்கவும்,
# நோர்வே வாழ் தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்தம் வளர்ச்சிக்காய் வழிவகுக்கவும்,
# வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் தாயக உறவுகளின் நிரந்தரத் தீர்வுக்காய் பணியாற்றிடவும்" எனும் குறிக்கோளுடன் இத் தேர்தலை நடாத்தினர்.

நோர்வேயில் வாழும் வாக்களிக்கத் தகுதியான இலங்கைத் தமிழ் மக்களின் தொகை கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர், நேற்றைய தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 2767 பேராகும், ஆகவே கிட்டத்தட்ட 90 சதவிகிதமான 27,233 பேர் வாக்களிக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.

10 வீதமான தமிழ் வாக்காளர்கள் அளித்த வாக்குகளின் மூலமே நோர்வே ஈழத் தமிழர் அவை தெரிவாகியுள்ளது தெரியவந்துள்ளது, 90 வீதமான வாக்காளர்கள் இத் தேர்தலை நிராகரித்தமைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, அவற்றில் முதலாவதாக இவ்வமைப்பு விடுதலைப் புலிகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அமைப்பாகவும், மற்றைய காரணியாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தினை மாத்திரம் பிறப்பிடமாகக் கொண்ட பிரதிநிதிகளை வேட்பாளர்களாக உள்வாங்கிக் கொண்டதும் ஆகும்.

இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அலகுகளாகும், இந்த எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் நோர்வே நாட்டில் வாழும் போது யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இத் தேர்தலுக்கான அபேட்சர்களாக நியமிக்கப்பட்டு தேர்தலும் நடந்து முடிந்துள்ளது, இங்கு உருவாக்கப்பட்டுள்ள பிராந்தியவாதத்தினால் 10 சத விகித வாக்குகளை மட்டுமே இந்த அபேட்சகர்கள் பெறக் கூடிய துர்ப்பாக்கியம் நிகழ்ந்துள்ளது, இதனை வைத்துக் கொண்டு நோர்வே வாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் தாமென தம்பட்டம் அடிக்கும் நிலை இவர்களுக்கு இல்லையென்பது தெட்டத்தெளிவாகின்றது.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது அபேட்சகர்களின் குடும்ப அங்கத்தவர்கள் செலுத்திய வாக்குகளாகவே கணிக்க முடிகின்றது, அவ்வாறே அபேட்சகர்களும் வாக்குகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசியப் பட்டியலில் உள்ள ஜெயஸ்ரீ பாலசுப்பிரமணியம், ஆ.குமாரசாமி (ஆதி), சனுகாந்த் பரம்சோதி (சனு), ஸ்ரிவன் புஸ்பராஜா கருணசாமி, தயாபரன் பரமானந்தன், திலகவதி சண்முகநாதன், பஞ்சகுலசிங்கம் கந்தையா (Dr. ரமணன்), பியோனார் முக்ஸ்னெஸ் மற்றும் தர்மசீலன் தர்மலிங்கம் போன்றவர்களில் எவரும் யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு எந்த இலங்கையின் தமிழ் மக்கள் வாழும் மாவட்ட பிரதிநிதிகளிடமிருந்து தெரிவு செய்யப்படவில்லை.

இந்தத் தெரிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதனை எவராலும் அறிய முடியவில்லை, இதற்கான காரணத்தையும் இந்த அவையினர் அறியத் தரவும் இல்லை.

"இனியாகிலும் நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம்" எனும் தலைப்பில் தேர்தற்குழு 2009.11.14 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கைக்கும் மேற்சொல்லப்பட்ட அபேட்சகர்கள் தெரிவுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கின்றது, யாழ்ப்பாணத்தை மாத்திரம் சொந்தமாகக் கொண்டவர்களை பட்டியலிட்டு பிரதேசவாதத்தை உருவாக்கிவிட்டு இனியாகிலும் நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம் எனக் கூறுவது வேடிக்கையாக இல்லையா?


இலங்கை வலைப்பதிவர் மற்றும் அச்சு ஊடகச் சந்திப்பும் இணையவழி ஒலிஒளிச் சீர்கேடும்!


வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது, இதனை இணையவழியூடாக கேட்க வசதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர், ஆனால் சீராக அதனைக் கேட்கவோ அல்லது பார்க்கவோ முடியாமல் இருக்கின்றது.

இணையவழியூடாக பத்துக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இந்த நிகழ்வைப் பார்க்க ஆவலோடு காத்து இருப்பதுடன், ஒலி ஒளி அமைப்புக்களைச் சீர்செய்யுங்களென பல தடவைகள் கூறியும் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை.

முதற் தடவை நடைபெற்ற இலங்கை தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வின் நேரடி இணையவழிச் சந்திப்பு சீராக ஒலி ஒளி தடங்கலின்றி இருந்தது, இந் நிகழ்வை தோழர் கௌபாய்மது எனப்படும் மதுவதனன் மௌ.ஏற்பாடு செய்திருந்தார், இவரைப் போன்ற தொழிநுட்ப அறிவுகொண்டவர்கள் யாராவது இந்த ஒலி ஒளித் தடங்கலை நிவர்த்தி செய்யலாமே!

வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்குமிடையிலான சந்திப்பு!

இலங்கையின் கொழும்பு - 7, ரொறிங்டன் அவனியூ, இலக்கம் - 3 இல் அமைந்துள்ள "இருக்கிறம்" சஞ்சிகை அலுவலகத்தில் நவம்பர் இரண்டாம் நாளாகிய நாளை மாலை 3 மணியளவில் வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெற இருக்கின்றது.

இச் சந்திப்பு வலைப்பதிவருக்கான உத்தியோகபூர்வ இரண்டாவது சந்திப்பாக மதிப்பிடப்படுகின்றது, இச்சந்திப்பு சிறப்படைய "களத்துமேடு" வாழ்த்துகின்றது.

இந்தச் சந்திப்பினை இணைய வழியூடாகச் சென்று கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை தோழர் கௌபாய்மது எனப்படும் மதுவதனன் மௌ.ஏற்பாடு செய்துள்ளார், முதலாவது வலைப்பதிவர் சந்திப்பினை இணைய வழியூடாகவும் பங்குபற்ற வழி வகுத்தவர் மதுவதனன் என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த தடவை ஏற்பட்ட தவறுகள் இனிமேலும் ஏற்படாது என எதிப்பார்க்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்பானது இலங்கைப் பதிவர்களுக்கு மட்டுமானதா அல்லது சர்வதேச பதிவர்களுக்குமானதா என அறிய முடியவில்லை, தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.


ஸ்ரீலங்கா கடலில் வைத்து இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்படும் கொடூர வீடியோ பதிவு!

புத்திசுவாதீனமற்ற இளைஞர் ஒருவர் பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தின் மீது கல்வீச்சு நடத்திவிட்டு கடலில் குதித்துத் தப்பி ஓடிய போது துரத்திச் சென்ற ஸ்ரீலங்கா பொலிஸார் அவ்விளைஞனை கடலில் வைத்து அடித்து மூழ்கடித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவத்தினை பம்பலப்பிட்டியில் உள்ள Z Building இல் இருந்து TNL தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் மிகவும் துல்லியமாக வீடியோ காட்சியாகப் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தினையும் பாதுகாப்பினையும் பேணிக் காக்க வேண்டிய காவற்துறையினர் ஸ்தலத்திலேயே தண்டனையைக் கொடுக்க முனைவது கண்டிக்கப்பட வேண்டியதே, நீதி தேவதை கண் திறப்பாளா?



41,685 பேர் இன்று பரவலாக மீள்குடியேற்றம்!

வன்னி யுத்தத்தில் தப்பித்து வவுனியா நலன்புரி கிராமங்களில் தங்கியிருந்த மக்களின் ஒரு தொகுதியினரான 12,000 குடும்பங்களைச் சேர்ந்த 41,685 பேர் இன்று 22 ஆம் திகதி மீள்குடியேற்றம் செய்யப்படவிருக்கும் செய்தி ஊடகங்களில் முன்னுரிமை பெற்றுள்ளது.

2583 குடும்பங்களைச் சேர்ந்த 8643 பேர் வவுனியாவிலும், 2644 குடும்பங்களைச் சேர்ந்த 6631 பேர் மன்னாரிலும், 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16,391 பேர் முல்லைத்தீவிலும், 2453 குடும்பங்களைச் சேர்ந்த 10,017 பேர் கிளிநொச்சியிலும் மீள்குடியேற்றம் பெறுகின்றனர்.

180 நாட்களில் துரித மீள்குடியேற்றம் நடக்குமென மே மாதத்தில் உறுதியளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலம் கடந்த நிலையில் நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களை கட்டங்கட்டமாக மீள்குடியேற்றம் செய்ய அதிகாரிகளைப் பணித்த விடயமானது ஆரோக்கியமானதாகவே கருதப்படுகின்றது, இந்நிலையில் அக்டோபர் மாதத்திலும் அதனைத் தொடர்ந்து வரும் காலங்களான இவ் வருட இறுதிக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றம் செய்வாரென அரசியல்வாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கந்தளாய் நெடும் பாலத்தினைத் ஜனாதிபதி ராஜபக்ஷ திறந்து வைத்த போது கூறிய "சொல்வதைச் செய்வேன், செய்வதைச் சொல்வேன்" எனும் வாக்கியங்கள் நிஜமாக வேண்டுமெனில் நிர்க்கதியாக நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்கள் அனைவரும் அவரவர் சொந்த நிலத்தில் மீளக் குடியேற்றம் பெற வேண்டும்.

செய்வாரா மஹிந்த!, பொறுத்திருந்து பார்ப்போம்!