செவ்வாய், 12 ஏப்ரல், 2011

"நீயா நானா" கோபிநாத்தும் தமிங்கில ஆதிக்கமும்!

இந்திய தொலைக்காட்சிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் நெருங்கிய உறைவைப் பேணி வருகின்றது என்றால் அதில் மிகையில்லை, அந்த தொலைக்காட்சியில் இடம்பெறும் "நீயா நானா", "நடந்தது என்ன" போன்ற நிகழ்ச்சிகள் பிரபல்யமானவை, இவற்றை திரு.சந்திரன் கோபிநாத் மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கின்றார்.


இந்திய சமுதாயத் தளத்தில் நின்று மொழி, இனம், இலக்கிய மற்றும் மனோவியல் சார்ந்த யதார்தமான சுவராசிய நிகழ்ச்சியாக இவை தென்படுவதனால் தமிழ் மக்களை ஆட்கொண்டுள்ளது என்பது உண்மை.

1975 ஜூலை 4 ஆம் நாள் பிறந்த திரு.கோபிநாத் 1998 ஆம் ஆண்டு ராஜ் தொலைக்காட்சி மூலமான அறிமுகத்தைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து இன்று வரையாக "மக்கள் யார் பக்கம்", "சிகரம் தொட்ட மனிதர்கள்", எனும் வரிசையில் "நீயா நானா", "நடந்தது என்ன" என்பவை கோபிநாத்துக்கென தனி அடையாளத்தை வகுத்துக் கொடுத்துள்ளன.

சமுதாய நேர் நோக்குடன் பலத்த புரிதல்களுக்கு மத்தியில் நீண்ட தேடுதல்களை மேற்கொண்டு நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் நடத்தும் வடிவம் அபாரம். எந்தத் தலைப்பினை எடுத்துக் கொண்டாலும் பாதை சிதறுண்டு போகாமல் குறித்த இலக்குக்கு சபையை நகர்த்திச் செல்லும் பாங்கு அருமையிலும் அருமை.

இந்த அளவுக்கு பிரசித்தமான கோபிநாத் முற்றுமுழுதான தமிழ்மொழி நிகழ்சியை இன்னும் நடாத்தவில்லையென்பது கவலையைத் தோற்றுவிக்கின்றது, கோபிநாத்தின் நிகழ்ச்சிகளில் எங்கு பார்த்தாலும் ஆங்கில மொழித் திணிப்பு அதிகம் ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிகின்றது.

2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த "தெருவெல்லாம் தேவதைகள்" எனும் நூலும், உங்கள் அகம் புறம் இரண்டையும் அணு அணுவாக நீங்களே ரசியுங்கள் காதலியுங்கள் முதலில் நீங்கள் உங்களைக் கௌரவமாகப் பாருங்கள் ஆராதியுங்கள் இந்த உலகம் உங்களை எப்படி பார்க்கிறது என்பதன் ஆரம்ப புள்ளி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது என்று தனி மனித சுய கம்பீர விளக்கத்துடன் பிரசுரமாகியுள்ள "ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!" எனும் நூலும்
ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த "நீயும் நானும்" எனும் தொடர் இளைஞர்களை அதிகம் ஈர்த்தது, இதன் ஒவ்வொரு கட்டுரைகளும், மிகுந்த அக்கறையோடு, சமூகப் பிரச்னைகளை எடுத்துக்கொண்டு அழகாகவும் ஆழமாகவும் அலசப்பட்டிருக்கின்றது. சில கட்டுரைகள் தன்னம்பிக்கையை விதைக்கின்றன. சில, சீரிய பண்புகளை மனதில் பதிக்கின்றன. சில போராட்ட குணத்தை வளர்க்கின்றன, வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக கட்டுரைகளைப் படிக்கும்போது, இது வெறும் சுயமுன்னேற்றப் புத்தகம் என்று கூறிவிட முடியாத அளவுக்கு சமூக தாக்கம் மேலிட எழுதப்பட்டு இருக்கிறது, இவையே கோபிநாத்தின் தமிழ் எழுத்துத் தளத்தினை வாசகர்களுக்குப் பரீட்சயமாக்கியது.






"எதிர்கால இந்தியா" சார்ந்து திரு.ச.கோபிநாத் நடாத்தும் கருத்தரங்குகள் அளப்பரிய விடயங்களை காத்திரமாக மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றன, இவற்றுக்கும் மேலாக அயல்நாடுகளுக்குச் சென்று நீயா நானா வடிவில் கோபிநாத் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார், அவற்றில் "குழந்தைகளை வளர்ப்பதற்குச் சிறந்தது அமெரிக்கச் சமுதாயமா அல்லது இந்திய சமுதாயமா", அமெரிக்கா வந்த பின் மாறியிருப்பது ஆண்களா அல்லது பெண்களா போன்ற அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் வர்ணிக்கத்தக்கவை.

இவ்வளவு பிரபல்யமான கர்வம்மிக்க மனிதரான கோபிநாத் தனித் தமிழில் நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டுமென நினைக்காதிருப்பது வேதனையாக இருக்கின்றது, தமிழகத்தை ஆட்கொள்ளவிருந்த ஹிந்தி மொழியையைத் துரத்துவதற்காக உள் நுழைந்த ஆங்கிலம், இன்று தமிழ்மொழியைத் துரத்த எத்தனம் பண்ணிக் கொண்டிருக்கின்றது, இதன் முன்னோட்டமே தமிழகத்தில் பேசப்படும் தமிங்கிலமாகும். இந் நிலை தொடருமாகில்,
தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ? எனும் பாரதி பாடலும் கூடவே தமிழையும் தேடவேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

பின்னிணைப்பு:
மேலதிக தேடலுக்கு http://www.tedxtirupur.com/blog/2011/03/neeya-naana-gopinath/

4 கருத்துகள்:

  1. தோழர்களே, திருவாளர் ச.கோபிநாத் அவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரிந்தவர்கள் எனக்கும் தந்து உதவவும்.

    பதிலளிநீக்கு
  2. \\தனித் தமிழில் நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டுமென நினைக்காதிருப்பது வேதனையாக இருக்கின்றது, \\தனித் தமிழில் -என்றால் அர்த்தமென்ன? இப்போது தமிழில்தானே நீயா, நானா வந்து கொண்டிருக்கிறது??

    \\தமிழகத்தை ஆட்கொள்ளவிருந்த ஹிந்தி மொழியையைத் துரத்துவதற்காக உள் நுழைந்த ஆங்கிலம்\\
    என்ன சொல்றீங்க? ஆங்கிலம் வெள்ளையனோடு சில நூறு வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தில் நுழைந்தது. ஹிந்தி வெள்ளைக் காரன்கிட்ட சுதந்திரம் வாங்கிய பின்னர் தமிழக பள்ளிகளில் கற்ப்பிக்க முயற்சித்தார்கள். ஆனால் நமது இனமான [ஈனத்] தலைவர்கள் அதை விடவில்லை.

    \\இதன் முன்னோட்டமே தமிழகத்தில் பேசப்படும் தமிங்கிலமாகும்.\\ அப்புறம் எதுக்கு ஆங்கிலம் பற்றிய பிளாக்குகளின் பெயர்களை இந்தத் தளத்தில் லிங்கு கொடுத்து பிரபலமாக்க நினைக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  3. களத்துமேட்டுக்கு வந்து கருத்திட்ட ஜெயதேவ் தாஸ் அவர்களின் வருகைக்கு நன்றி.

    "நீயா நானா" கோபிநாத்தும் தமிங்கில ஆதிக்கமும்! எனும் தொனிப் பொருளில் பின்னப்பட்ட கட்டுரையில் சில விடயங்களை எடுத்து ஆராய முற்பட்டுள்ளீர்கள், நீயா நானா நிகழ்ச்சியில் வாதிடப்படும் பல விடயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்களுக்கே விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கின்றது, காரணம் எல்லோருக்கும் ஆங்கில அறிவு நூறு சத விகிதமாக இல்லை.

    திரு.கோபிநாத் அவர்களே அண்மைய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரிடம் தமிழில் பேசுங்கள், உங்களால் முடியுமென கருத்துத் தெரிவித்ததானது தமிழிலே நீயா நானா நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு.
    http://www.youtube.com/watch?v=5kS111LGzgQ&feature=player_embedded#at=84

    ஆங்கிலேயன் சென்ற பின்னர் தமிழக பாடசாலைகளில் ஊடுருவிய ஹிந்திமொழியின் கற்பித்தலைத் தடுப்பதற்காகவே ஆங்கிலத்தை நீங்கள் குறிப்பிடும் தலைவர்கள் காவிக் கொண்டார்களோ என்னவோ, அதுவே இப்போது ஆதிக்கம் செலுத்த எத்தனிக்கின்றது என்பதுவே உண்மை.

    களத்துமேடு ஆங்கிலத்துக்கு எதிரானது அல்ல, அதனாலேயே ஆங்கிலம் பற்றிய சுட்டிகளுக்கும் தளம் கிடைத்துள்ளது. ஆனால் பாமரர் முதற்கொண்டு படித்தவர் வரை அனைவருக்கும் சொந்தமான தொலைக்காட்சியான விஜயில் தமிங்கில ஆதிக்கம் அதிகரிப்பது வேதனையாகத் தெரியவில்லையா, இங்கு செந்தமிழில் நடத்த வேண்டிய தேவையில்லை, ஆங்கிலத்துக்கென தனித்துவமான தொலைக்காட்சிகள் பலவுள்ளனவே! இதைத் தான் ஆங்கில மோகம் என்பதா?

    பதிலளிநீக்கு
  4. \\திரு.கோபிநாத் அவர்களே அண்மைய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரிடம் தமிழில் பேசுங்கள், உங்களால் முடியுமென கருத்துத் தெரிவித்ததானது தமிழிலே நீயா நானா நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு.\\

    \\இங்கு செந்தமிழில் நடத்த வேண்டிய தேவையில்லை, ஆங்கிலத்துக்கென தனித்துவமான தொலைக்காட்சிகள் பலவுள்ளனவே! இதைத் தான் ஆங்கில மோகம் என்பதா?\\
    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிலர் அவ்வப்போது கொஞ்சம் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள், மற்றபடி நிகழ்ச்சியைப் புரிந்து கொள்வதில் சிரமம் எதுவும் இல்லை. நீங்கள் இணைத்துள்ள வீடியோவில் வரும் பையம் நன்கு ஆங்கிலம் பேசத் தெரிந்தவன். அவனை விட இன்னொருத்தன் வெள்ளைச் சாமி, அவனுக்கு ஆங்கிலம் பேசவே தெரியவில்லை, இருந்தும் செயற்கையாக [கேவலமான] ஆங்கிலத்தில் பேசி மற்றவர்களையும், தொலைக் காட்சி மூலம் பார்க்கும் நேயர்களையும் impress பண்ண முயற்சித்துக் கொண்டிருந்தான். இந்த மாதிரி போலி ஆசாமிகளால்தான் ஆங்கில மோகம் வருகிறது.

    \\களத்துமேடு ஆங்கிலத்துக்கு எதிரானது அல்ல, அதனாலேயே ஆங்கிலம் பற்றிய சுட்டிகளுக்கும் தளம் கிடைத்துள்ளது. \\

    ஆங்கிலம் கற்க ஆரம்பித்தால் அது நிச்சயம் நீங்கள் பேசும் போது பிரதிபலிக்கத் தானே செய்யும்? பேசும் போது ஆங்கில வார்த்தைகள் வந்து விழத்தானே செய்யும்? அப்புறம் ஏன் தமிங்கலம் ஆகிப் போச்சு அது இது என்று புலம்புகிறீர்கள்?

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----