சனி, 31 மார்ச், 2007

மழை விட்டும் தூவாணம் விட வில்லை


கடந்த 26 ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வான்படையால் ஸ்ரீலங்கா கட்டுநாயக்கா விமான படைத்தளம் மீது நடாத்திய தாக்குதலானது பல தரப்பட்ட வர்க்கத்தினதும் வாதப் பிரதிவாதங்களில் இருந்து இன்னும் மீளாமல் இருப்பது மழை விட்டும் தூவாணம் விட வில்லை என்பதை ஞாபகமூட்டுகின்றது.

விமானப்படைத் தளத்தில் ராடர் கழற்றியதை புலிகளுக்கு அறிவித்தது யார்?

இலங்கையில் பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் குற்றம் சுமத்தப்படுகிறது. அண்மையில் ஜெனீவா நகரில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மகாநாட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை சார்பில் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் படாதபாடுபட நேர்ந்தது.
இலங்கையில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் மிகைப்படுத்திக் கூறப்படும் தகவல்களா? அல்லது உண்மையான நிலைமை இதுதானா? இவற்றை மிகைப்படுத்திக் கூறப்படும் தகவல்கள் எனவும் அரசாங்கத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் சதி வேலைகள் எனவும் அரசு தெரிவிக்கிறது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டிலுள்ள மனித உரிமை அமைப்புகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. அதேபோல சர்வதேச அமைப்புகளும் வெளிநாட்டுத் தூதுவர்களும் நிலவும் நிலைமை குறித்து விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளாக் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை மையமாகக் கொண்டுள்ள Human Rights Watch அமைப்பும் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டுள்ளது. அதேபோலவே, ஜெனீவாவிலுள்ள மனித உரிமை ஆணைக்குழு, ஐ.நா. அமைப்பு, ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி மற்றும் இங்கிலாந்து, சுவிற்சர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்ட சில அமைப்புகளும் நாடுகளுமாகும்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுதல் மற்றும் ஆட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். அதேபோலவே கௌரவமான ஜனநாயக சமூகத்தில் மனித உரிமைகள் என்பது பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய விடயமாகும். மறுபுறத்தில் இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இது மிக முக்கியமான- பெறுமதி மிக்கதான கோரிக்கை என்பதை மறக்கக்கூடாது.
நாட்டின் பல்வேறு இடங்களில் அண்மையில் தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்படுகின்றனர் கொல்லப்படுகின்றனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வவுனியாவிலும் நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலும் இவை சாதாரண நிகழ்வுகளாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு கடத்திச் செல்லப்படுபவர்களின் சடலங்கள் இலகுவாகக் கண்டறிய முடியாத இடங்களில் காணப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போனவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஏதோ விதத்தில் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளும் தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று கொல்வதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இந்த ஆட்கடத்தல்கள் தொடர்பாக முற்றிலுமாக அரசு மீது குற்றஞ் சுமத்துவது எவ்வளவு தூரத்திற்குப் பொருத்தமானது என்பதை ஆராய்ந்து அறிதல் வேண்டும். நிலைமை அவ்வாறு இருப்பின், அதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். நாட்டில் யுத்தம் இடம்பெற்று வரும் வேளையில் ஆயுதம் தாங்கிய இளைஞர் குழுக்களும் ஈ.பி.டி.பி. போன்ற அமைப்புகளும் நாட்டில் செயற்பட்டு வருகின்றன. அரசுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதற்காகக் குறிப்பிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இந்த ஆட்கடத்தல்களை மேற்கொள்கின்றன என அரசு தெரிவிக்கிறது. அரசின் இந்த வாதத்தின்படி அரச இராணுவம், கருணா குழு, ஈ.பி.டி.பி. அமைப்பு மற்றும் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு சில ஆயுதக் குழுக்களும் செயற்படுவதாகத் தோன்றுகிறது. அவ்வாறான குழுக்கள் செயற்படுவது உண்மையாயின் அது மிகப் பயங்கரமான நிலைவரமாகும்.
ஈ.பி.டி.பி. மற்றும் கருணா தரப்பினர் ஜனநாயக நீரோட்டத்தில் கலக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றனர். அரசுக்கு அசௌகரியங்களை உருவாக்கும் விதத்தில் கொலைகளை மேற்கொண்டு தங்கள் எதிர்கால செயற்பாடுகளை பாழடிக்க இந்த அமைப்புகள் முயற்சிக்கும் எனச் சிந்திக்க முடியாது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள் எனக் கூறப்படும் "சிங்களப்புலிகள்" சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் வழங்கிய தகவல்களையடுத்து வெடிபொருட்கள் கூடக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிங்களப் புலிகளைப் போலவே கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்குத் தகவல்களை வழங்கிய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கில் யுத்தம் இடம்பெற்று வரும் வேளையில் விடுதலைப் புலிகளுக்குத் தகவல்களை வழங்கினர் எனக் கூறப்படும் தென்பகுதியைச் சேர்ந்த சிலரையும் விலைபோன இராணுவ அதிகாரிகளையும் கைது செய்வதில் அரசு தயக்கம் காட்டவில்லை. இவ்வாறான கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கொழும்பில் பல இடங்களில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு வருகின்றனர். சிங்களப் புலிகளைக் கைது செய்த அரசு அவர்களை நாட்டுமக்களின் முன்பும் ஊடகங்களின் முன்பும் நிறுத்த நடவடிக்கை எடுத்தது. கைது செய்யப்பட்ட நபர்கள் கிளிகளைப் போல் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கியதைக் காண முடிந்தது. இவையனைத்தும் நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தெரியவந்த சம்பவங்களாகும்.
கொழும்பில் இடம்பெற்றுவரும் கைதுகள் சட்டப்படி மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எவரையாவது கைது செய்வதானால் நாட்டின் சட்டத்தின்படி, அதற்கோர் வழிமுறை உள்ளது. அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸாருக்குத் தெரிவித்தே அந்தக் கைதை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அண்மையில் இடம்பெற்ற கைதுகள் ஆட்கடத்தல்கள் போல் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம் வழமையான கைதுகளின் போது அனுசரிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த சில கைதுகளின் போது அனுசரிக்கப்படவில்லை.
இது தொடர்பாக பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் விசாரித்தபோது அவர்கள் பின்வருமாறு தெரிவித்தனர்.
"விடுதலைப் புலிகளின் தொடர்பு வலைப்பின்னல் பாதுகாப்புத் துறைக்குள்ளும் கசிந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் கைதுகளை மேற்கொள்ளும் போது வழமையான விதிமுறைகளைக் கையாண்டால் குறித்த அந்த நபர் கைதிலிருந்தும் தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாட்டில் யுத்தம் இடம்பெற்று வரும் வேளையில் உலகில் எந்தவொரு நாட்டிலும் நீங்கள் கூறுவது போல் ஜனநாயகம் இருக்கவில்லை என்பதே பாதுகாப்புத் துறையினரின் கருத்தாக உள்ளது" எனத் தெரிவித்தனர்.
நாட்டில் கிளர்ச்சி இடம்பெற்ற 1988/89 களில் தமக்கு எதிரான அரசியல் கருத்துகளைக் கொண்டவர்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டனர் என்பதை நாங்கள் கண்டுள்ளோம். உத்தியோகப்பற்றற்ற ஆயுதக் குழுக்கள் செயற்படும் போது அவர்களது குறிக்கோள்கள் ஜனநாயக வழிமுறையில் அமையா.
முத்துராஜவெலவில் 5 சடலங்கள் காணப்பட்டதையடுத்து மனித உரிமைகள் என்ற தலைப்பு புத்துயிர் பெற்றுள்ளதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொலிஸாரை அழைத்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு பணித்தார். நாட்டில் மனித உரிமைகள் பாரதூரமான விதத்தில் மீறப்பட்ட காலகட்டத்தில் அது குறித்துத் தெரிவிக்க அன்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குத் தான் சென்ற போது எவ்வாறாயினும் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது எனத் தான் தெரிவித்ததாக ஜனாதிபதி கூறினார்.
இலங்கையில் மனித உரிமைகள் என்ற தலைப்பு அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மங்கள மற்றும் ஷ்ரீபதி ஆகியோருக்கு முக்கிய அரசியல் தலைப்பாக மாறியுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன எனத் தெரிவித்து இலங்கைக்கு ஐ.நா. அமைதிப் படையைக் கொண்டு வருவதே நோர்வே அரசின் எதிர்பார்ப்பு என ஜே.வி.பி. தெரிவிக்கிறது. " எமது நாட்டின் மனித உரிமைகளை நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம் (கையாளுவோம்)" என்பதே ஜே.வி.பி. உலகுக்கு விடுக்கும் தகவலாகும்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற முறைப்பாடு தொடர்பாக உடனடியாக செயலில் இறங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மனித உரிமைகள் பற்றிக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அதேபோல சர்வதேசம் கவனத்தைச் செலுத்தக் கூடிய விதத்தில் மனித உரிமைக் குழுவையும் நியமித்தார். இவற்றின் ஊடாக வெளிநாடுகள் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை தொடர்பான நிகழ்வுகள் குறித்துக் கண்டறியும் வழியை ஜனாதிபதி உருவாக்கினார்.
ஐ.நா.வின் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் பிராந்தியப் பணிமனையை இலங்கையில் அமைப்பது தொடர்பாக ஐ.நா. தெரிவித்த கருத்தை இலங்கை அரசு அண்மையில் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது. நாட்டில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக அரசும் ஜனாதிபதியும் நடவடிக்கை எடுத்துவரும் வேளையில் " எங்கள் மனித உரிமையை நாங்களே பார்த்துக் கொள்ளுவோம்" என ஜே.வி.பி. தெரிவிப்பதானது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையாகும்.
நாட்டில் அரசியல் காரணங்களுக்காக ஆட்கள் கடத்தப்பட்டனர் என இதுவரை தகவல் எவையும் கிடைக்கவில்லை. அதுபோலவே தனிப்பட்ட காரணங்களுக்காக அரச படைகளின் தலையீட்டால் எவரும் காணாமல் போனதாகவும் குற்றஞ்சாட்டப்படவில்லை. தமிழ் இளைஞர்களை அரச படைகள் கடத்திக் கொன்றது தொடர்பாக சட்டபூர்வமாக நிரூபிக்கும் விதத்தில் எதுவித சம்பவமும் குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அரச படைகள் இவ்வாறான கொலைகளை மேற்கொள்கின்றன என்ற குற்றச்சாட்டில் நூற்றுக்கு நூறு வீதம் நியாயம் இருப்பதாகச் சிந்திக்க முடியாது.
இருப்பினும், இந்த நிலைமைகளைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பிலிருந்து பாதுகாப்புத் துறையினர் தப்பிக்க முடியாது. நாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாரிய பிரச்சினைகள் இல்லையென்ற நிலையில் அவை மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன என்றால் அது நல்ல விடயமாகாது.
இருப்பினும், அண்மையில் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பாக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலைமை தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதேபோல், அரச சார்பற்ற அமைப்புகள் தேவைக்கேற்ப யுத்தத்திற்கு முகங்கொடுக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


லக்பிம பத்திரிகையில் இருந்து தமிழாக்கம் - நேமிக்கா
நன்றி தினக்குரல் 3132007

புதன், 28 மார்ச், 2007

தமீழீழ வான்படையின் கன்னித் தாக்குதல்

ஸ்ரீலங்காவின் முதுகெலும்பாக திகழும் கட்டுநாயக்கா விமான படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இரண்டாவது தடவையாகவும் அல்லது தமீழீழ வான்படையின் கன்னித் தாக்குதல் சம்பவமே உலக அரங்கிலேயே உரத்துப் பேசப்பட்ட தற்காலச் செய்தியாகும்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கொடூர முகத்தைக் கண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் பயந்து விட்டார்கள் என கற்பனை பண்ணிய ஸ்ரீலங்கா சனாதிபதி மகிந்த ராசபக்சவும் அவரது அரசாங்கமும் பங்குனித் திங்கள் 26 ம் நாள் அதிகாலை என்ன செய்வதெனத் தெரியாமல் அதிர்ச்சியடைந்த செய்தி சகல ஊடகங்களிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தன.

காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வரும் தமிழினம் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் செய்தி அனைவரும் அறிந்ததே, இலங்கைத் தீவில் தமிழர்களுக்குப் பிரச்சனை இல்லையென கூறிக் கொண்டிருந்த சிங்கள ஆதிக்கவாதிகள் ஒருபடி கீழே இறங்கி தமிழர்களுக்கும் இந் நாட்டில் பிரசைகளே, இவர்களுக்கும் சகல உரிமைகளும் உண்டென ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், வாய்ப் பேச்சில் மட்டுமே கூறிக்கொண்டு மனதில் வீரவாள் ஏந்திய சிங்கங்களாய் உருவெடுத்திருப்பது சர்வதேசத்துக்கும் தெரிந்த விடயம்.

இந்த ஆண்டு பிறந்ததில் இருந்து தமிழர் பிரதேசங்களை சுத்திகரிப்புச் செய்ய வேண்டுமென திடசங்கற்பம் பூண்ட ஸ்ரீலங்கா அதிபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக செல் வீச்சுக்களை நடாத்துமாறு முப்படைத் தளபதி எனும் காரணத்தினால் உத்தரவிட்டிருந்தார், இதனை ஏற்றுக் கொண்ட படைத் தளபதிகள் ஆட்லறி மோட்டார் குண்டு வீச்சு, பல்குழல் ஆட்லறி குண்டு வீச்சு, விமானத்தில் இருந்து துப்பாக்கிப் பிரயோகமும் குண்டுத் தாக்குதலும் என்றெல்லாம் தமிழர் பிரதேசத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றனர், சுடுகாடாகி மக்கள் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள். திருகோணமலைப் பிரதேசத்தின் மாவிலாறு பகுதியில் உருவான தமிழர் துரத்தியடிப்புப் படலம் வாகரை, கஞ்சிகுடியாறு, தொப்பிகலை, படுவான்கரை, பூநகரி இப்போது கொக்கட்டிச்சோலை என்று விரிவடைந்து கொண்டிருக்கின்றது.
எப்படியாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்ற வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா படை தரப்பு முன்னேறி வருகின்றது. ஸ்ரீலங்கா ஒரே கொடியின் கீழ் ஆட்சிமை செய்யப்பட வேண்டுமென்பது அவர்களின் வாதம், இவர்களை எதித்து போர் தொடுத்துக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளோ எம்மை நாம் தான் ஆள வேண்டும், அதற்காக எதனையும் இழக்கத் தயார் எனக் கூறுகின்றனர்.

கெரில்லா தாக்குதல் எனப்படும் கரந்தடிப் படை நடவடிக்கையில் சிறப்பாக விழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் பரிணாம வளர்ச்சியடைந்து மரபு வழி போராட்டமாக தமது போராட்ட தந்திரங்களை மாற்றியதோடு தங்களுக்கென கடற்படையையும் செப்பனிட்டனர், அதன் தற்போதைய கடைக்கூற்றுப் பிரசவமாக தமிழீழ விமானப் படை உலகின் கண்களுக்கு விருந்தாக இன்று பேசப்படுகின்றது.

ஸ்ரீலங்கா அரசைப் பொறுத்தவரை புலிகள் இயக்க வளர்ச்சி வேதனை தருவதாகவே இருக்கின்றது, புலிகளை ஒடுக்க தன்னாலான முயற்சிகளையும் செய்து தோல்வியுற்ற நிலையில் இருக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் திடீரென விமானத்தினால் திட்டமிட்டு தாக்குதல் நடாத்திய விடயம் அரசை கிலி கொள்ள வைத்து விட்டது.

தலைநகர் கொழும்பும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் பாதுகாப்புப் பிரதேசம் எனக் குறிப்பிடப்பட்டு முழத்துக்கொரு இராணுவச் சாவடி அமைத்து, இத் தெருவால் வரும் தமிழர்களை அங்குலம் அங்குலமாகப் பரிசோதித்து வெடிமருந்து ஏதுமில்லையென உறுதி செய்யப்பட்ட பின் போக அனுமதிக்கின்றனர், அதிலும் சந்தேகப்படும்படி தெரிவோர் விசாரணைக்கென சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர், சிலர் எங்கு உள்ளனர், எங்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்றே தெரியாமல் இருக்கின்றது. இப்படியான மர்மமாக முடிச்சுகளைப் போட்டுக் கொண்டிருக்கும் அரசுக்கும் படையினருக்கும் அதிர்ச்சி தரும் சம்பவம் தான் கடந்த 26ம் திகதி அதிகாலை இடம் பெற்ற கட்டுநாயக்கா விமானப் படைத் தளம் மீதான தாக்குதல்.

இந்த நிலையில் படையினரின் கண்களுக்கு மண்ணைத் தூவி விட்டு வன்னியில் இருந்து கொழும்புக்கு அனுராதபுரம் வழியாக ஆகாய மார்க்கமாக வந்து நீர்கொழும்பில் அமைந்துள்ள விமானப்படை முகாமுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடாத்தினார்கள் என்று கூறும் சம்பவமானது அரசாங்கத்தை வெட்கித் தலை குனிய வைத்து விட்டது. விமானம் என்ன சட்டைப் பைக்குள் கொண்டு செல்ல சிறிய பொருளா? மூடி மறைத்து விட முடியாத சம்பமானதால் அரசாங்கம் வெளிப்படையாகவே புலிகளின் வான்படைத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

1998ம் ஆண்டு கார்த்திகையில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துயில் கொள்ளும் மாவீரர்களுக்கு விமானத்தின் மூலம் மலர் தூவப்பட்ட செய்தி அறிந்த கணத்தில் இருந்து வான்பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்க ஸ்ரீலங்கா அரசு முற்பட்டது, அன்றிலிருந்தே புலிகளின் விமானம்பற்றி பரவலாகப் பேசப்பட்டது.

சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க பதவி வகித்த காலத்தில் அலரிமாளிகையிலும், பாராளுமன்றத்திலும் இன்னும் முக்கிய இடங்களிலும் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் ரேடார் கருவிகளையும் வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்து பொருத்தினார்.

இத்தனை பாதுகாப்புகளுக்கும் மத்தியில் விமானத்தில் வந்து இலக்கின் மீது சிறப்பாக தாக்குதல் நடாத்தி விட்டு தளம் திரும்புவதென்றால் சாதாரண விடையமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் இதில் சிறப்பாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவர்களின் திட்டமிடலினால் இலக்கு சிறப்பாக கணிக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றது, இதனால் அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

புலிகளின் சிறப்பான தாக்குதல்கள் அனைத்தும் படையினரின் பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் பலவீனமான ஓட்டைகளைப் பார்த்து தெளிவாக செப்பனிடப்பட்டவையே ஆகும். அதேபோன்று தான் இத்தாக்குதலும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது, ஸ்ரீலங்கா அரசினால் கொள்வனவு செய்யப்பட்ட ரேடார் கருவிகள் அனைத்தும் இரவில் பார்வைத் திறனற்றவை, பகலில் தான் அவற்றின் செயற்பாடு இருக்கும், இதை தெளிவாக புரிந்து கொண்ட புலிகள் தருணம் வரும் வரை காத்து இருந்தனர் அது தான் சர்வதேச கிரிகெட் போட்டி, சிங்களவர்களுக்கு கிரிகெட் என்றால் உண(ர்)வையே மறந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள், இதற்கு இராணுவத்தினரோ விமானப்படையினரோ விதி விலக்கல்ல, துப்பாக்கி கையில் இருந்தாலும் கூட கீழே வைத்து விட்டு கிரிகெட் ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்து ஓட்ட எண்ணிக்கையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பர். இந்தச் சந்தற்பத்தை தருணம் வரும் வரை காத்திருந்த புலிகள் இலகுவாக இலக்கை தகர்த்தனர், கட்டுநாயக்கா விமானப்படை நிலையத்தில் தரித்து நின்ற போர் விமானங்களில் நாற்பது சதவீதத்துக்கு அதிகமானவை சேதமாகின என்பது தற்போதைய உத்தேச மதிப்பீடாகும், தமிழர் தாயகப் பரப்பில் வான் தாக்குதலை நடாத்திய போர் விமானங்களே இவையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையும் விமானத் தாக்குதலும் அண்டை நாடுகளுக்கு பேராபத்து கொண்டதென்று ஸ்ரீலங்கா சனாதிபதி மகிந்த ராசபக்ச கூறி சர்வதேசத்தின் உதவியைப் பெறுவற்கு முயற்சி செய்து வருவது கூர்ந்து நோக்கத்தக்கது.

இந்த தாக்குதலின் மூலம் புலிகளுக்கு சிறப்பான விளம்பரம் கிடைத்துள்ளதென்றால் அதில் மிகையில்லை. இருப்பினும் புலிகள் இந்த இலக்கை வேறொரு இடத்துக்குத் திருப்பியிருந்தால் அதிகப்படியான படையினரை அழித்து போர் விமானங்களையும் தகர்த்திருக்கலாம், அவர்கள் ஏனோ அந்த இலக்கை தெரிவு செய்யாமல் விட்டு விட்டனர், வன்னியின் இருந்து கடற்பரப்பின் வானவெளியூடாக நீர்கொழும்பு வருவது இலகுவானது என புலிகள் கணிப்பிட்டு இருக்கலாம், அத்துடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருக்கும் ரேடார் கருவி பழுதடைந்த தகவலும் புலிகளுக்கு இலக்கை தெரிவு செய்ய உதவியிருக்கலாம். இங்கு இருக்கும் ரேடார் கருவி மூன்று கிலோமீற்றர் தூரத்தில் வரும் விமானங்களைத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டக் கூடியது.

இத் தாக்குதலைச் சிறப்பாக நடாத்தி விட்டோம், விமானம் மீண்டும் தளம் திரும்பி விட்டது என்றெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் வீர வசனம் பேசினாலும், இச்சம்பவத்தின் எதிரொலி எப்படி இருக்கும் என்பதனை தீர்மானிக்க மறந்து விட்டனர், மறு நிமிடமே தமிழர் தாயகப் பரப்பில் ஆட்லறி, பல்குழல் செல் வீச்சுக்களும் மற்றும் விமானத் தாக்குதல்களும் எம்மக்களை தொல்லைப்படுத்தின, உயிராபத்துக்களை ஏற்படுத்தின, உடமைகளை அழித்தன. இதற்கு விடுதலைப் புலிகளின் பின்னோக்கிய பார்வை பயனற்றுப் போனது. ஸ்ரீலங்கா அரசாங்கமும், எதிர்க்கட்சியும் மாறிமாறி இத்தாக்குதலின் பின்னணி எப்படியானது என்பது பற்றி ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொண்டு வருகின்றனர்.

உலகில் தமிழருக்கென விமானப் படை உருவாகி விட்டது, ஈழம் வெகுவிரைவில் என்றெல்லாம் சர்வதேசத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு சிலர் பேசிக் கொள்வதனையும் அறியக் கூடியதாக உள்ளது, இருப்பினும் மாற்றுத் தரப்பினரால் சில மாற்றுச் செய்திகளும் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன. விமானத் தாக்குதல் எதுவும் விடுதலைப் புலிகளால் விமானப் படைத்தளத்தில் நடாத்தப்படவில்லையென்றும் உள்ளே ஏற்பட்ட வெடித் தாக்குதல் என்றும், சந்தர்ப்பம் பார்த்து புலிகள் காய் நகத்தி தங்களின் விளம்பரத்தைச் செய்து விட்டார்களெனவும், இதற்கு அவசர அவசரமாக வெட்டி ஒட்டப்பட்ட படங்கள் சாட்சி என்றெல்லாம் காரணம் கூறுகின்றனர்.

ஒரு படத்தில் தமிழீழ விமானப்படையினர் இரண்டு வரிசையான நிற்க நடுவில் பிரபாகரன் நிற்கும் படம் ஒட்டப்பட்ட படமென்றும் அவரின் கழுத்துக்கு பின்புறத்தில் விமானப்படை சீருடையின் கழுத்துப் பட்டி தெரிவதாகவும், வரிசையாக அமர்ந்திருக்கும் மற்றைய படத்தில் ஒருவர் வெட்டி எடுக்கப்பட்டு அவ்விடத்தில் பிரபாகரனின் படத்தை தத்துரூபமாக ஒட்டி இருப்பதாகவும், ஆனால் இதில் ஒருவரின் கைக்கு மேல் பிரபாகரன் அமர்ந்திருப்பது போன்று தெரிவதாகவும் கூறுகின்றனர்.

எது எப்படி இருப்பினும் இராணுவ இலக்கு ஒன்று புலிகளினால் தகர்க்கப்பட்டுள்ளது என்பது மாத்திரம் உண்மை. காலப் போக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆகாய மார்க்கமாக அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக அறிய முடிகின்றது. விடுதலைப் புலிகள் ஆகாய மார்க்கமாக தாக்குதல் நடாத்துகின்றார்களோ என்னவோ ஆனால் ஸ்ரீலங்கா படை சமவலுவிழந்து நிற்கதியாக திக்கற்று நிற்கின்றது என்பது தான் உண்மை. எந்த நேரத்தில் எவ்விடத்தில் எங்கிருந்து புலிகள் தாக்குதல் நடத்த வருவார்கள் என்று தெரியாமல் உளவியல் தாக்கத்துக்கு உள்ளாகி திணறுகின்றனர். எந்த முகாமுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பது யாரைப் பாதுகாப்பது இப்படியான கேள்விகளுக்கு பதிலின்றி தவிக்கின்றது ஸ்ரீலங்கா படை.

வெள்ளி, 23 மார்ச், 2007

பரீட்சாத்தம்

இது ஊடகங்களின் புதினங்களை அலசும் திறனாய்வுக் களம்

புதன், 14 மார்ச், 2007

சோதனைப் பதிவு






ஊடகங்களில் அலசப்படும் விடயங்களின் உண்மைத் தன்மையைத் திறனாய்வு செய்வதே இத் தளத்தின் நோக்கமாகும்.



இன்று எண்ணற்ற இணையத் தளங்கள் தமிழுக்கென இருந்த போதிலும் இப்படியான கருத்தினை முன்னிலைப்படுத்தி பத்தி எழுதியதாக அறிய முடியவில்லை, தமிழருக்கென இருக்கும் ஊடகங்கள் தங்களின்இருப்புக்கேற்பவே சாயம் கலந்த செய்திகளை தந்து கொண்டிருக்கின்றனவென்பது
கண்கூடு.

பக்கச் சார்பான கருத்துக்களை பரப்புரை செய்யும் ஊடகங்களால் தமிழ்ச் சமூகம் உண்மைத் தன்மையினை அறிய முடியாமல் இருக்கின்றது, ஆகவே இயன்றவரை களத்து மேடு உண்மைத் தன்மையினை காத்திரமாகத் தரப் பாடுபடும்.

களத்து மேடு ஒரு நடு நிலைத் தளம் என்பதால் விமர்சனத்தை ஏற்போம், திறனாய்வு செய்வோம்.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----