சனி, 29 ஆகஸ்ட், 2009

ஜீ ரீ வி க்கு மூடு விழா ?

புலம் பெயர்ந்த மக்களிடம் தொலைக்காட்சி எனும் பேரில் பல தமிழ் தொலைக்காட்சிகள் கடை விரித்துள்ளன, புலிகளின் பாசிஷ நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் உத்தியை வகுத்து தரிசனம், தென்றல் எனும் வரிசையில் இரண்டு வருட காலமாக ஜீரிவி தொலைக்காட்சி தனது வியாபாரத்தை நடத்தி வந்தது, இதற்கான செலவினங்களை விடுதலைப் புலிகளே பொறுப்பேற்று இருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்திருந்தன, இதனால் இலவசமாக புலிகளின் செயற்பாடுகளை அரங்கேற்ற ஜீரீவி நிர்வாகத்தால் முடிந்தது.

இருப்பினும் இதனை வியாபாரமாக மேற்கொண்டால் பல டொலர்களைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதில் முனைப்புக் கொண்ட நிர்வாகம் "தரணியெங்கும் தமிழொழி பரவிட" எனும் கோஷத்துடன் சந்தாதாரர்களைத் தேடத் தொடங்கியது, இத் தொலைக்காட்சியில் சந்தாவினைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஆட்டம் காணத் தொடங்கியது, இக்காலத்தில் ஸ்ரீலங்கா படையினர் விடுதலைப் புலிகளுக்கான சண்டையைத் தீவிரப்படுத்தி இருந்தனர், இதனால் சந்தா தேடும் படலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததுடன் வன்னி யுத்தத்தில் சிக்குண்ட மக்களை விளம்பரக் காட்சியாக்கி புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்களின் ஆதரவை கண்ணீர்த் துளிகள் எனும் தொலைக்காட்சி நிகழ்வு மூலம் திரட்டத் தொடங்கினர், இதனால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஜீ ரீவியைப் பார்க்க உந்தப்பட்டனர், இதனை சாதகமாகப் பயன்படுத்த நினைத்த ஜீ ரீவி நிர்வாகம் மீண்டும் சந்தாதாரர்களையும், விளம்பரதாரர்களையும் தேட முற்பட்டனர், எதிர்பார்த்த வருமானம் கிடைக்கத் தவறியதால் மீண்டும் இலவச சேவையை நடாத்த முனைந்தனர்.

கேபி பத்மநாதனின் கைதுக்குப் பின்னர் ஜீ ரீவி தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளினால் கிடைத்து வந்த நிதி முடக்கப்பட்டது, இதனால் தொலைக்காட்சியைத் தொடர்ந்து நடாத்த முடியாத நிலையில் இருக்கும் ஜீ ரீவி நிர்வாகம் இன்று தனது வழமையான நிகழ்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்தி விட்டு "வடம் பிடிப்போம்" எனும் முழு நாள் நிகழ்ச்சியின் மூலம் இனிமேல் இலவசமாக தொலைக்காட்சியை நடத்த இருப்பதாகவும் அதற்கான தொடர் ஆதரவைத் தருமாறு நேயர்களிடம் மூவர் சேர்ந்து இரத்தல் செய்கின்றார்கள், இதனால் கிடைக்கும் நிதியைக் பெற்றுக் கொண்டு தொலைக்காட்சிக்கு மூடு விழா நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

புலிகளின் அரசியல் வங்குரோத்தும் ஸ்ரீலங்கா அரசின் தமிழின அழிப்பும்!

ஸ்ரீலங்கா பேரினவாதத்தினால் சிற்பான்மை இனமான தமிழர்கள் காலம் காலமாக இன்னல்களை அனுபவித்துக் கொண்டே வருகின்றனர், இதில் இருந்து விடுதலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இளைஞர்கள் திரண்டு விடுதலை இயக்கங்களை நோக்கி வீறுநடை போட்டனர், பல இயக்கங்கள் உருவாகி ஸ்ரீலங்கா படை பலத்துக்கு நிர்க்கதி நிலையை உருவாக்கினர், இதனால் வடக்கின் யாழ் குடா மற்றும் வன்னி நிலப்பரப்பு, கிழக்கில் மூதூர் மற்றும் மட்டக்களப்பின் படுவான்கரை போன்ற பகுதிகள் பூரணமாக விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாகின.

இந்த இளைஞர் இயக்கங்களின் ஒற்றுமையைக் கண்ட பேரினவாதமும், வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளும் சீரழிக்க முனைப்புக் காட்டியது, இதற்கு தூபம் இடுவது போல் ஒத்துழைத்தது விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர மற்றய இயக்கங்கள் எதனையும் இயங்க விடக் கூடாது என திட்டமிட்டு சகோதர இயக்கத்தவர்களை விடுதலைப் புலிகள் அழிக்கத் தொடங்கியன் விளைவால், அன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றிடம் ஏற்படத் தொடங்கியது.

அரசியல் மயப்படுத்தாத எந்த மக்கள் போராட்டமும் விடுதலை பெற்றதாக வரலாறு இல்லை, துப்பாக்கிக்குப் பயந்தே பல மக்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி வகுத்தனர், ஆனால் அதற்கு எதிர்மாறாக புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள், புலம்பெயர் நாடுகளில் வாழ வேண்டுமெனில் ஸ்ரீலங்காவில் தொடர் பிரச்சனை இடம்பெற்றுக் கொண்டிருக்க வேண்டும், இதனைக் காட்டியே அகதி அந்தஸ்துடன் கூடிய வதிவிட உரிமையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதுவே அதற்கான காரணம் ஆகும். இந்த குறுகிய நோக்கத்துக்காகவே அதிக பணத்தினை விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்து போரை ஊக்கப்படுத்தியும், ஆதரவு செலுத்தியும் வந்தனர் புலம்பெயர் தமிழர்கள் என்றால் அதில் மிகையில்லை.

மக்களை அரசியல் மயப்படுத்தாது இராணுவ மயப்படுத்தலில் தீவிரம் காட்டிய விடுதலைப் புலிகள் வன்னி இறுதி யுத்த காலத்தில் மக்களை யுத்த அரணாக பாவிக்கத் தொடங்கியதனாலேயே மக்களின் அனுதாபத்தைப் பெற முடியாமல் போய் விட்டது, ஆனால் வன்னியில் உள்ள மக்கள் எம் பின்னால் இருப்பதாக உலகத்துக்கு காண்பிக்கத் தவறவும் இல்லை, இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஸ்ரீலங்கா பேரினவாதம் தமிழின அழிப்பை சுலபமாக மேற்கொண்டது, சர்வதேசத்தினால் பயங்கரவாத அமைப்பாக இனங்காணப்பட்ட விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி வகுத்துள்ள மக்களை சர்வதேசம் கண் திறந்து பார்க்க மறுத்தது, அவர்களையும் விடுதலைப் புலிகளாகப் பார்த்ததோ என்னவோ!, ஆனால் அந்த மக்களை விடுவியுங்கள் என விடுதலைப் புலிகளுக்கு பல வழி முறைகளில் செய்திகளை அனுப்பின, அதனையே ஸ்ரீலங்கா அரசும் செய்து பிரசாரத்துக்கு வழி தேடியது.

போரின் இறுதிக் காலங்களில் இருபதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன, இதன் போது ஸ்ரீலங்கா படையினரால் பலர் கைதாகி விசாரணை செய்யப்பட்டு வருவதாக பல தரப்பட்ட செய்திகள் கூறின, விசாரணையின் போது சித்திரவதைக்கு உள்ளாகி பலர் கொல்லப்பட்ட செய்திகளும் கூடவே வந்து கொண்டு தான் இருந்தன, இந்தச் செய்திகளின் வரிசையில் இறுதியாக நேற்று வந்த செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டது.

ஜனவரி மாதப் பகுதியில் ஸ்ரீலங்கா படையினரால் தமிழ் இளைஞர்கள் சித்திரவதைக்குள்ளான நிலையில் அவயங்கள் கட்டப்பட்டு, நிர்வாணமாக அழைத்து வரப்பட்டு தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோப் பதிவினை
ஜெர்மனி நாட்டிலுள்ள ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர் அமைப்பு வெளியிட அதனை பிரித்தானியாவிலுள்ள Channel 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது, இதன் மூலம் ஸ்ரீலங்காவின் பேரினவாதப் போக்கின் குரூரத் தன்மை வெளிப்படையாகத் தெரிகின்றது, ஆனால் இந்த பதிவின் மூலாதாரத்தினைத் தேட முடியாமல் இருப்பதாகவும் கூடவே செய்தி பகிர்கின்றது சனல் 4 தொலைக்காட்சி.

தமிழின அழிப்பான மனிதவுரிமை மீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகளை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வந்தாலும் கூட அழுத்தம் எதனையும் தெரிவிப்பதாகத் தெரியவில்லை, இதனை சாதகமாகப் பயன்படுத்தும் ஸ்ரீலங்கா தனது வழமையான பாணியில் ஜனவரி காலப் பகுதியில் போர் முடிவுக்கு வரவில்லை, இந்த வீடியோ பதிவு விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது படையினர் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இல்லையெனவும் புனிதம் கற்பிக்கின்றார் ஸ்ரீலங்கா வெளியுறவுச் செயலர் பாலித கோகன.

ஸ்ரீலங்கா பேரினவாதம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு இவ்வாறு மூடி மறைக்கப்பட்டு வருவதற்கு தமிழர்களின் ஒற்றுமையின்மை முக்கியம் ஆகும். விடுதலைப் புலிகளால் மக்களை அரசியல் மயப்படுத்த முடியாமல் போனமையும்,தமிழ் மக்களிடம் புலிகள் ஏற்படுத்திக் கொண்ட அராஜகப் போக்குமே எமது ஒற்றுமையின்மைக்கான மற்றைய காரணமாகும்.

தொடரும் ஒற்றுமையின்மையால் அழியப் போவது இலங்கையில் வாழும் தமிழினமே என்பதைச் சிந்தித்து எதிர்காலத்தைத் திட்டமிட புத்திஜீவிகள் முன்வர வேண்டும். இரக்கமற்ற முறையில் ஸ்ரீலங்கா பேரினவாதம் நடத்தும் கொடுமைகளை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்.


ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

நிறைவெய்திய இலங்கைப் பதிவர் சந்திப்பு! - இணையவழி ஒளிபரப்பினூடான தேடல்.

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியது, வந்திருந்த ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர், இந் நிகழ்வை சர்வதேசமே இணைய வழியாகப் பார்த்தும் கருத்துத் தெரிவிக்கக் கூடிய வகையிலும் ஒழுங்கு செய்யப்பட்டமை ஓர் வரப்பிரசாதமாகும்.

தொழிநுட்ப வளர்ச்சியினால் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் தமிழ் வலைப் பதிவர்கள் இந்த நேரடி நிகழ்வை முறையாகப் பயன் படுத்தியிருப்பார்கள், ஆனால் இதில் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டிய பதிவர்கள் தேவையில்லாமல் அரட்டையில் இறங்கியதே வேதனையாக இருந்தது.

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலங்கை வலைப் பதிவர் சந்திப்பை பலத்த வேலைப்பளுவுக்கும் மத்தியில் நிகழ்த்திக் கொண்டிருந்த தோழர்கள் நேரடி இணையத்தின் வழியான கருத்துத் தெரிவிக்கும் பகுதிக்கும் ஓடோடி வந்து வலைப் பதிவர்களின் அரட்டைக்கும் பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டிருந்தது சிறப்பாக அமைந்திருந்தது.

நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட வலைப் பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்ட போதிலும் அதனை இணைய வழி நேரடி நிகழ்வில் கேட்க முடியாமல் இருந்தது, காரணம் சத்தம் குறைவாகவும், தெளிவின்மையாகவும் இருந்தமையே, அது தொழிநுட்பக் கோளாறாக கொள்ளத் தக்கதே!

இளைய பதிவர் ஒருவரின் அறிமுகம் எல்லோரையும் திகைப்புக்கு உள்ளாக்கியது, அதிகம் கருத்துத் தெரிவிக்கா விட்டாலும் தந்தையினாலேயே இந்த பாதைக்குள் நுழைந்தாக குறிப்பிட்டது அருமை.

கலந்துரையாடலில் "யாழ்தேவி திரட்டி" பற்றிய விமர்சனம் சூடு பிடித்தது, பலரும் பல கருத்தினைத் தெரிவித்தனர், யாழ்தேவி எனும் நாமம் பொருத்தமற்றது என்பதுவே பலரது ஆதங்கமாக இருந்தது, இதில் பிரதேசவாதம் தொக்கி நிற்பதாக சிலரும், சின்னமாக பொருத்தமற்ற விதத்தில் புகையிரதம் இதில் இணைக்கப்பட்டிருப்பதாக சிலரும் விமர்சனம் செய்தனர். அதன் நிர்வாகத்தினரும் அதனை ஏற்றுக் கொண்டமை சந்திப்புக்குக் கிடைத்த சிறப்பம்சத்தில் ஒன்றாகும்.

அடுத்த சந்திப்பு பற்றியதாகவும், ஏற்பாட்டுக் குழுவினரின் நிர்வாகப் பொறுப்புக்கள் பற்றி பேசப்பட்ட போதிலும் முடிவெதுவும் எட்டப்படவில்லை. இறுதியில் சஞ்சிகையொன்றும் வினியோகிக்கப்பட்டு இனிதே நிறைவெய்தியது.

படங்களை நேரடியாக பங்கெடுத்த வலைப் பதிவர்களில் பதிவுகளில் காணாலாம்.
1. ஆதிரை
2. வந்தியத்தேவன்

பிந்திய இணைப்பு
3. மதுவதனன் மௌ

சனி, 22 ஆகஸ்ட், 2009

இலங்கை வலைப் பதிவர் சந்திப்பும் நிகழ்ச்சி நிரலும்!

நாளை காலை கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் "இலங்கைப் பதிவர் சந்திப்பு" கோலாகலமாக நிகழவிருக்கின்றது.

நிகழ்ச்சி நிரல்:
* அறிமுகவுரை
* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
* திரட்டிகள்
* சிறப்பு அதிதி உரை
* இடைவேளை
* வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
* வலைப்பதிவும் சட்டமும்
* பதிவுலக அனுபவங்கள்
* எதிர்காலத் திட்டங்கள்
* கலந்துரையாடல்
* நன்றியுரை

தயாராகியுள்ள நிகழ்ச்சி நிரலுக்கேற்ப உரிய நேரத்திலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடுமென நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர். நிகழ்ச்சியின் பெறுபேறுகளைக் கொண்ட படங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் உடனுக்குடன் தரவேற்றம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - 2009

இலங்கை வலைப் பதிவாளர்களை இணைக்கும் நோக்கில் எதிர்வரும் 2009.08.23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9 க்கு கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இலங்கைப் பதிவர் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பாக முதலாவது சந்திப்பினை நடாத்துவதற்கு பதிவுலகத் தோழர்கள் லோஷன், புல்லட், வந்தி மற்றும் ஆதிரை போன்றோர் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

* இலங்கைத் தமிழ் வலைப் பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

* புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

* இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செய்தல்.

* பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

* பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்.

இதுபோன்ற நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இலங்கையர் வலைப் பதிவை சர்வதேச தரத்துக்கு நிகராகக் கொணர இலங்கைப் வலைப் பதிவர் அனைவரும் இந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவினைக் கொடுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

நடைபெறவிருக்கும் இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற "களத்துமேடு" வாழ்த்துகின்றது.


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்பட்ட தமிழ்க் கட்சிகள் !

யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன, இதில் ஈபிடிபி சார்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று மேயரை தன்னகத்தே வசப்படுத்திக் கொண்டது.

வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று நகரசபைத் தலைமைத்துவத்தைக் கைப்பற்றியுள்ளது, ஐனநாயக மக்கள் முன்னணி இன்னும் மேலதிகமாக 144 வாக்குகளைப் பெற்றிருப்பின் நகரசபைத் தலைமைத்துவம் புளொட் வசமாகியிருக்கும்.

எது எப்படி இருப்பினும் இதுவரை 22 பாராளுமன்ற ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் எவ்வித சேவைகளும் இன்று வரை செய்யவில்லை, மாறாக சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாஸிச நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஈழப் போராளிகளெனும் அங்கீகாரம் தேடும் முயற்சியிலேயே ஈடுபட்டு வந்தது.

விடுதலைப்புலிகளினால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டு யுத்தக் கவசங்களாகப் பாவிக்கப்பட்ட பல இலட்ச அப்பாவி மக்களை விடுதலைப் புலிகளெனவும், புலிகளை நேசிப்பவர்களெனவும் சர்வதேசரீதியில் பொய்ப் பிரசாரம் செய்து சமுதாயத்தில் ஊனமுற்றவர்களாகவும், வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை அகதி முகாமில் முடக்குவதற்கும் காரணமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மீண்டும் வவுனியா நகர மட்டத்தில் ஆட்சியதிகாரம் வழங்க மக்கள் முனைந்திருப்பது தீக்குள் விரலை வைப்பதற்கு ஒப்பானது.

இன்னும் எத்தனை ஆயிரம் மக்களைப் பலி எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காத்திருக்கின்றார்களோ தெரியாது, அதற்கான அங்கீகாரத்தினை வவுனியா மக்கள் கொடுத்துள்ளார்கள், இனி வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சந்தற்பவாதக் கொள்கையினால் தமிழினம் பூண்டோடு அழிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.

மக்களின் பிரதிநிதிகளென தொடர் பிரசாரம் செய்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்தில் தூக்கியெறியப்பட்டு இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர், விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடனும், அவர்களின் கள்ள வாக்குகளாலும் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிராமங்களுக்கே உரித்தான உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி கொள்ள முடியாமல் தள்ளாடி நிற்பது வெளிச்சமாகின்றது.

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எனும் நாமத்துடன் செயற்பட்டு வரும் "கடிதம் புகழ்"
வீரசிங்கம் ஆனந்தசங்கரி நடந்து முடிந்த தேர்தலில் அவமானத்தைச் சந்தித்துள்ளார், வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை நழுவவிட்டதுடன், யாழ்ப்பாண மாநகர சபையில் தன்னைச் சார்ந்தவர்களுக்கே ஆட்சியதிகாரம் கிடைக்குமெனக் கனவு கண்டிருந்தார், பிற்போக்குத்தனமும், சுயநலமும் இவருடனே குடிகொண்டிருப்பதனால் உள்ளூராட்சித் தேர்தலிலேயே இவரது கூட்டுக் கட்சி தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது, இதில் வீ.ஆனந்தசங்கரிக்குக் கிடைத்த விருப்பு வாக்குக்கள் 424 மாத்திரமே, இந்த இலட்சணத்தில் அரசியல்வாதியெனும் நாமத்துடன் இன்னும் தமிழர்களை ஏமாற்றத் தான் வேண்டுமா!

சனி, 8 ஆகஸ்ட், 2009

யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தல் முடிவு - 2009


மொத்த வாக்குகள் - 100417
அளிக்கப்பட்ட வாக்குகள் - 20922
நிராகரிக்கப்பட்டவை - 1358

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 10602, ஆசனங்கள் 11+2 = 13 (போனஸ் அடங்கலாக)
இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 8008, ஆசனங்கள் - 8
சுயேச்சைக் குழு - 1 வாக்குகள் - 1175, ஆசனம் - 1
தமிழர் விடுதலைக் கூட்டணி வாக்குகள் - 1007, ஆசனம் - 1

வவுனியா நகர சபைத் தேர்தல் முடிவு - 2009



வவுனியா நகர சபைத் தேர்தல் முடிவுகள் 2009

மொத்த வாக்குகள் 12292
அளிக்கப்பட்ட வாக்குகள் 120850
நிராகரிக்கப்பட்டவை 558

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 4279, ஆசனங்கள் - 3 + 2 = 5 (போனஸ் அடங்கலாக)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வாக்குகள் - 4136, ஆசனங்கள் - 3
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 3045, ஆசனங்கள் - 2
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் - 587, ஆசனம் - 1

தேர்தல் முடிவுகள் - 2009

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது, மாலை 6 மணிக்குப் பின்னராக வாக்குகள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுக் கொண்டிருகின்றன, சில இடங்களுக்கான தபால் மூல வாக்குகளின் பெறுபேறுகள் ஸ்ரீலங்கா ஊடகங்களின் மூலமாக உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

தேர்தலின் பெறுபேறுகளை ஸ்ரீலங்கா தேர்தல் திணைக்கள இணையத் தளத்தில் அறியக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியா நகரசபைத் தேர்தல் முடிவு

மொத்த வாக்குகள் 12292
அளிக்கப்பட்ட வாக்குகள் 120850
நிராகரிக்கப்பட்டவை 558

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 4279, ஆசனங்கள் - 3 + 2 (போனஸ் அடங்கலாக)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வாக்குகள் - 4136, ஆசனங்கள் - 3
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 3045, ஆசனங்கள் - 2
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் - 587, ஆசனம் - 1




வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

கே.பி. விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்!

மலேசியா கோலாலம்பூரின் ஜலான் ரொங்கு அப்துல் ரகுமானில் உள்ள மஜீத் இந்தியா எனும் இடத்திலுள்ள ரியூன் ஹொட்டலின் அருகில் வைத்து ஆசிய பிராந்திய இன்ரபோலினால் கடந்த ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே।பி குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராஜா பத்மநாதன் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவரின் சில புனை பெயர்கள்:

கே.பி
செல்வராசா பத்மநாதன்
சண்முகம் குமரன் தர்மலிங்கம்
கே பத்மநாதன்
குட்டி மாஸ்ரர்
குட்டி சிறீ
தர்மலிங்கம் சண்முகம் குமரன்
தம்பையா செல்வராசா
கழுதை (பிரபாகரனால் வைக்கப்பட்ட செல்லப் பெயர்)
பெரியதுரை
கண்ணாடி பத்தன்
சதாசிவம் தர்மலிங்கம் ....

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

கே.பி. தாய்லாந்தில் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்பட்ட பின் அவ் அமைப்புக்கு பொறுப்பாளர் தானே என உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தவரும், சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த கே.பி (குமரன் பத்மநாதன்) எனப்படும் செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா அரச தகவல்கள் கூறுகின்றன.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் ஜலான் ரொங்கு அப்துல் ரகுமான் Jalan Tuanku Abdul Rahman(வீதியில்), மஜீத் இந்தியா பகுதியில் உள்ள "ரியூன் ஹொட்டேல் Tune Hotels" எனும் இடத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மகன் மற்றும் பா.நடேசனின் சகோதரருடன் உரையாடிக் கொண்டிருந்த கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதன் 2009.08.05 பிற்பகல் 2 மணியளவில் வெளியே சென்ற போது இன்ரபோலின் ஆசியப் பிரிவினரால் கடத்தப்பட்டு பாங்கொக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இணையத் தள செய்தியொன்று கூறுகின்றது.

கடந்த 2007 செப்டம்பர் காலப் பகுதியில் குமரன் பத்மநாதன் பாங்கொக் பொலிஸாரினால் கைதானதாக "பாங்கொக் போஸ்ட்" செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



2007 செப்டம்பரில் "பாங்கொக் போஸ்ட்" தளத்தில் வெளியான செய்தி:
Top Tamil Tiger arrested in Bangkok

(BangkokPost.com, Agencies)
Thailand has arrested the finance chief of the Tamil Tigers of Sri Lanka, allegedly the group's chief procurer of arms.

Kumaran Pathmanadan is reported to have been arrested by police in Bangkok on Monday evening. He is one of the top officials in the Liberation Tigers of Tamil Eelam, the formal name of the group.

Pathmanadan apparently had obtained Thai citizenship. He continued to run the global network of LTTE offices and its weapons procurement, logistics and money laundering operations.

He has been on Interpol's Most Wanted list for a number of years. He has also been implicated in several assassinations of political leaders.

The online newspaper Asian Tribune called him "the king pin of Tiger arms smuggling".

"He is a noted smuggler of arms and narcotics. Operating with bank accounts opened in London, Frankfurt, Denmark, Athens and Australia... he has had a free run so far," the newspaper alleged

His arrest followed the detention in Ranong province last month of three Tamil Tiger operatives trying to buy guns and 45,000 rounds of ammuntion.

All four were suspected of running a Tamil Tiger gun-running ring centered in Thailand.

Pathmanadan, who also had a number of aliases, has recently been the subject of a manhunt that stretched to Johannesburg, Rangoon, Singapore and Bangkok. Police said they believed he had bank accounts in London, Frankfurt Denmark, Athens and Australia and has over 200 passports for his use.

He and his group are suspected of running weapons purchased Thailand and neighbouring countries to the Tamil Tigers in Sri Lanka. The Tigers have been desinated as a terrorist group by most western countries, but not Thailand.

A Jane's Intelligence report on the group stated that despite the cease-fire agreement in Sri Lanka, the LTTE continued to re-supply cadres. It said:

"While Cambodia is the hub of the LTTE East Asia Network, Thailand continues to serve as the most important country for trans-shipment of munitions and coordination of logistics... its excellent communications infrastructure, proximity to former war zones in both Cambodia and [Burma] and its western coastline facing the Bay of Bengal and Sri Lanka beyond have made Thailand the ancient interface between the LTTE's war zone."

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

மாநகர சபைத் தேர்தலும் மக்களால் தூக்கி வீசப்பட்ட கூட்டமைப்பினரும் !

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைத் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ள இந்த நேரத்தில் அரசியல்வாதிகளும் வாக்குக்கோர வீடு வீடாக வீதி வீதியாக நடந்து வருகின்றார்கள்.

அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவும் அவர்சார் கட்சி உறுப்பினர்களும் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முகமிழந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு வாக்குத் தேடி வருகின்றனர், அவ்வாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், நாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்து தர்மலிங்கம் சித்தார்த்தன், திருநாவுக்கரசு ஸ்ரீதரன், வீரசிங்கம் ஆனந்தசங்கரி போன்றோர் தம் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்தும், இலங்கை தமிழரசுக் கட்சிக்காக சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரும் மக்களிடம் வாக்குத் தேடுவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தப் பிரதேசங்களில் இவ் அரசியல்வாதிகளுக்கென வாக்குவங்கி இல்லாமையே இவர்களின் தீவிர வாக்கு வேட்டைக்குக் காரணமாகும், கடந்த காலங்களில் மக்களுக்குச் சேவைகள் எதுவும் செய்யாமல், தேர்தல் முடிந்ததும் மக்களை மறந்து விடும் இவ் அரசியல்வாதிகளை மக்கள் திரும்பிப் பார்க்க மறுக்கின்றனர்.

மக்களை மறந்து விட்டவர்களில் முக்கியமானவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியெனப் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரானராகும், போட்டி அரசியலில் டக்ளஸ் தேவானந்தா இருக்கும் வரை பாராளுமன்ற ஆசனம் கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர்கள் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் தூக்கிப் பிடித்தாலே உயிர்ப்பிச்சையும் அவர்களின் ஆசீர்வாதத்துடன் கூடிய வெற்றி வாய்ப்பும் கிடைக்கும் என்பதால் கூட்டமைப்பென நாமமிட்டு ஒன்று சேர்ந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளெனும் ஏகப் பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விடுதலைப் புலிகள் செல்லப்பிள்ளைகளாகப் பார்த்தனர், தேர்தல் வந்தது கள்ள வாக்குகள் மூலம் வாக்குப் பெட்டிகள் நிரப்பப்பட்டன, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர், மேற்சொல்லப்பட்டோர் கண்ட கனவு நிறைவெய்தியது.

வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கான சேவை எதனையும் செய்யவில்லை, மாறாக உயிர்ப்பிச்சையும் பாராளுமன்ற ஆசனத்தையும் பெற்றுக் கொடுத்த விடுதலைப் புலிகளைத் துதி பாடுவதிலும் அவர்கள் செய்யும் கொலைக் கலாசாரத்தை நியாயப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தனர்.

திருகோணமலையில் இருக்கும் மாவிலாறு அணைக்கட்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் பூட்டப்பட்ட கணத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் இலட்சியத்தில் இருந்த தமிழீழம் சுருங்கத் தொடங்கியது, முற்போக்குச் சிந்தனையைக் கொண்டிராத புலித் தலைமையும் இதனை ஏறெடுத்துப் பாராமல் போரியலில் நாட்டம் கொண்டனர், அதன் விளைவு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஊனத்துடனும், மனநோயுடனும் உறவுகளை இழந்து அகதிகளாக வாழ்கின்றனர், பலரைப் பலி கொடுத்ததால் கிடைத்த பரிசும், படித்த பாடமும் இது தான்.

இன்னும் எமக்கு போர் எண்ணம் தேவையா, எம்மை நாம் இன்னும் இழக்கத் தயாரா எனும் கேள்விகள் இன்னும் மீளாய்வு செய்யப்படாமலே தொக்கி நிற்கின்றன.

பல இலட்சக் கணக்கான மக்கள் வன்னிப் போர் முனையில் விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கி அவதியுறும் போது உலகமே அழுதது, விடுதலைப் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடுவிக்குமாறு சர்வதேசமும் கேட்டுக் கொண்டது, ஆனால் விடுதலைப் புலிகளும், அவர்களின் பிரசாரப் பீரங்கிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அம் மக்களின் உயிர்களைப் பற்றி எந்தவித அக்கறையும் இன்றி அவர்கள் விடுதலைப் புலிகளை நேசிப்பவர்கள், புலிகளை விட்டு வர விரும்பாதவர்கள் என்றெல்லாம் கதை கூறித் திரிந்ததை எவரும் மறக்க முடியாது.

சம்பிரதாயத்துக்கேனும் "விடுதலைப் புலிகளே போர் முனையில் தடுத்து வைத்திருக்கும் அப்பாவி மக்களை விடுவியுங்கள்" என ஓர் அறிக்கை விடத் திராணியற்று புலிகள் செய்வதே சரியென வியாக்கியானம் செய்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகும், அந்த வகையில் வன்னியில் நிர்க்கதியாகி நின்று கொல்லப்பட்ட எண்ணற்ற மக்களின் இறப்புக்கும், அகதி முகாம்களில் உறவுகளை இழந்து ஊனமுற்று மனநோயாளிகளாக எம் மக்கள் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் காரணமானவர்கள்.

இப்படியான சுயநலவாதப் போக்குடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தமிழர்களின் ஒற்றுமை பற்றிக் கருத்துக் கூற அருகதை உடையவர்களா?, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் உரிமையையும் நேர்மையுடன் வென்றெடுக்கக்கூடிய தமிழர்களின் சக்தியாய் தமிழர்களின் மாபெரும் பலமாய் இருக்கக்கூடிய ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு என அறிக்கை விடுகின்றார்கள், இப்படிக் கூற இவர்களுக்கு வெட்கம் இல்லையா, இன்னும் தமிழினம் மௌனிக்க முடியாது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கை இவர்களைக் கேள்வி கேட்க வைக்கின்றது, இதனாலேயே இவர்களின் போலி முகங்களை அம்பலப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தையடுத்து இலங்கை வந்த இந்திய அமைதி காக்கும் படையுடன் இணைந்து செல்வம் அடைக்கலநாதன் சார்ந்த தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமைகள் எண்ணற்றவை அதில் பாடசாலை சென்ற மாணவர்கள் முதல் வீதியில் நின்ற வாலிபர்கள் வரை பலோத்காரமாக பிடித்துச் சென்று தமிழ்த் தேசிய இராணுவம் எனும் பேரில் ஆயுதப் பயிற்சி கொடுத்து புலிகளுக்கெதிராக போராடத் தூண்டி விட்டமை முதன்மையானதாகும்,
இந்திய இராணுவம் இந்தியா திரும்பிய போது அவர்களுடனே சேர்ந்து ஓடியோருள் செல்வம் அடைக்கலநாதன் சார்பு இயக்கத்தினரும், சுரேஸ் பிரேமச்சந்திரன் சார்பு இயக்கத்தினரும் முக்கியமானவர்கள்.

இந்தியாவில் சிலகாலம் அஞ்ஞாதவாசம் செய்து விட்டு ஸ்ரீலங்கா திரும்பி சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து துணைப்படையெனும் பெயரில் பாதுகாப்பு அமைச்சினால் கொடுக்கப்பட்ட பணத்தினையும், பாதுகாப்பையும் பெற்று கொழும்பில் அலுவலகம் அமைத்து அரச புலனாய்வாளர்களாக செயற்பட்டவர்கள் இவர்களே!, கொழும்பிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் இவர்களால் கைதாகி காணாமற் போனோர் அதிகம் பேர்.

அரசாங்கத்திற்குத் துணைபோனமைக்காகவே இவர்களுக்கு பாராளுமன்ற ஆசனம் இல்லாத போதிலும் ஜனாதிபதி சந்திரிக்காவினால் சில திணைக்களங்களுக்கு ஆலோசகர் பதவி வழங்கிக் கௌரவம் செய்ததை ஞாபகமூட்ட வேண்டியுள்ளது, ஈபிஆர்எல்எவ் அமைப்புக்காக சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு மீன்பிடி இலாகாவில் ஆலோசகர் பதவியும், ரெலோ அமைப்புக்காக ஜே.திவ்வியநாதனுக்கு ஓர் ஆலோசகர் பதவியும் வழங்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையுடன் கூடிய தங்கு விடுதியும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதே போன்று விடுதலைப் புலிகளுடன் இணைந்து குரல் கொடுத்த போது தமிழ் தேசிய இராணுவம் எனும் பேரில் கொண்டு செல்லப்பட்டு ஆயுததாரிகளாக்கப்பட்டவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்ற போதும் மௌனம் சாதித்து புலிகளின் செய்கைகளை நியாயப்படுத்தி வந்தவர்களில் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் முக்கியமானவர்கள்.

எக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு இடைஞ்சல் தரக் கூடியவர்களாக வாழ்ந்து வந்த இப்பேற்பட்டவர்களை தமிழர்களின் காவலர்களாக எவ்வாறு ஏற்றுக் கொள்வது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறிக் கொண்டு வரும் துரோகிகளை தூக்கி வீச தமிழ் மக்கள் காத்திருக்கின்றார்கள், எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள யாழ்ப்பாணம், வவுனியா நகர சபைத் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

சனி, 1 ஆகஸ்ட், 2009

இரா.சம்பந்தனுக்கு ஓர் மடல் - பாங்க்கொக்கில் இருந்து ஜெயக்குமார் !

கனம்
மதிப்புக்குரிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் திரு. இரா.சம்பந்தன் அவர்களுக்கு,


தாங்கள் கிழக்குமாகாணத்தை பிரதிநிதிப்படுத்துவர் என்பதாலும் நானும் கிழக்கு மாகாணத்தில் பிறந்த ஒரு பழைய போராளி என்பதாலும் இந்த சிறுமடலை எழுதிகின்றேன். சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். ...

உங்களைபோல் எனக்கு இந்த அரசியல் சித்து விளையாட்டு எல்லாம் தெரியாது.
ஓ..ம் நமோ நாராயணாயா
'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது'
அதனால்தான் இன்றும் அகதி வாழ்க்கை.

தாங்கள் பி.பி.சி தமிழோசையில் கொடுத்த செவ்வி கேட்டு எங்கள் செவிப்பாறைகள் எல்லாம் குளிர்ந்தது. காரணம் புலிகள் இன்று இல்லை புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றீர்கள. ஆனாலும் தங்களை நம்ப முடியாது. தங்களின் அரசியல் நாடமாகக்கூட இருக்கலாம். இப்படித்தான் இத்தனை காலா காலங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துகின்றீர்கள் இதுவும் இந்த தேர்தலில் வெல்லுவதற்குத்தனா? என்ற ஒரு பயமும் உள்ளது.

புலிகளோ தாங்கள் ஓர் நாடு கடந்த உத்தேச தமிழ் அரசை அமைக்கப் போவதாகவும், புலிகள் பீனிக்ஸ் போல எழும் என்றும் கூறுகின்றார்கள். நீங்களோ புலிகள் இன்று இல்லை புலிகள் அழிந்துவிட்டார்கள் என்று கூறுகின்றீர்கள். சம்பந்தன் நீங்கள் கவுண்டமணி பாணியில் காமடி ஏதும் பண்ண வில்லையே? பாதிக்கப்பட்ட உள்ளம் பதை பதைகின்றது. காரணம் உள்ளது பிரபாகரன் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தமிழ் மக்களை இன்னும் நிம்மதியாக வாழவிடமாட்டார்களா? பழ.நெடுமாறன் குண்டை போடுகின்றார் உங்கள் உறவுகள் தமிழகத்தின் வல்டி மைனர்கள்'. தங்களின் மதிப்புக்குரிய பாசிசப்புலிகளால் எனது சொந்த நாட்டில் வாழமுடியாமல் இன்னும் ஒரு நாட்டில் வாழ்கின்றேன். நாடு திரும்பலாம் என்ற ஒரு நப்பாசை தான். தங்களை நம்ப முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது.

கடந்த கால உங்கள் அரசியல் வாழ்க்கை. அவர் அவர் இருந்த இடத்தை வைத்துத்தான் மதிப்பு. தமிழ் தேசியத்தலைவர் அமிர்தலிங்கம் ஐயா பாசிசப்புலிகளால் கொலை செய்யப்பட்ட பொழுது தெரிந்தும் தெரியாமல் இருந்தது..

அப்போதய ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருடன் இணைந்து தமிழ் மக்களுக்குக்கு தீர்வு திட்டத்தை முன் வைப்பதகாகக் கூறி சந்திரிக்கா அம்மையாருடன் விசுவாசமாக இருப்பதாகக்காட்டி குண்டு துளைக்காத காரைப் பெற்ற பின் பல்டி அடித்தது.

பாசிசக்கொலைக்கு அரசியல் அங்கிகாரம் புலிகள் அழியும் வரையில் பெற்றுக் கொடுத்தது.

வீரகேசரி இணையம் 1.25.2009 11:38:59 ல் 'எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்' என்றும் பல்டி அடித்தது.

புலிகளே ஏக பிரதிநிதிகள் புலிகளுடன் பேசித்தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைத் தர முடியும் என்று புலிகள் அழிக்கப்படும் வரையில் பறக்காத நாடுகள் எல்லாம் பறந்து பறந்து பார்த்ததும், புலிகள் முற்றாக இல்லை என்றதும் தங்களின் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேசித்தான் ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்று தாங்கள் இன்று கூறுவதும் முற்றிலும் வேடிக்கை.

ஏன் நீங்கள் புலிகள் இருந்த பொழுது பிரபாகரன் எங்களுக்கு முக்கியம் அல்ல என்று கூறவில்லை?
எனக்கு ஒரு நீண்ட நாள் சந்தேகம் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன?
இது ஜனநாயகத்தை அவமதிக்கும் கூட்டமைப்புத்தானே?

நான் உண்மையில் படித்தது குறைவு இடித்தது சிவன் கோவில். நீங்கள் சட்டம் படித்தவர் அரசியலில் உள்ள நெளிவு சுழிவுகள் எல்லாம் புரிந்தவர். நீங்கள் இதன் தலைவர் என்ற படியால், தமிழ் தேசியம் என்றால் எனது கணக்கு இதுதான்.
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமைத்தவர்கள் புலிகள்.
அவர்கள் பாசிசத்தை மதிப்பவர்கள்.
ஜனநாயகம் அவர்களுக்கு சுத்த ஞான சுனியம்.

அப்படியானால் புலிகள் இல்லாத போது இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டு நீங்கள் முதலில் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியில் இணைவது சாலச் சிறந்தது என நான் நினைக்கின்றேன்.

புலிகள் இல்லாதபோது ஆண்டவன்தான் உங்களை காப்பாற்ற வேண்டும். புலிகள் இருந்த பொழுதும் புலிகள் இல்லாத பொழுதும் சரி தமிழ் மக்களுக்கு யாரும் ஏகப் பிரதிநிதிகள் அல்ல.

புலிகளால் பறிக்கப்பட்ட ஜனநாயகம் தமிழ் மக்களுக்கு மீண்டும் கிடைக்கவேண்டும்.
அவர்கள் அவர்களின் வாழ்விடங்களில் வாழ வேண்டும். அப்போது தான் தமிழ் மக்கள் சுயமாகச் சிந்தித்து முடிவு எடுப்பார்கள். ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் யாரை தெரிவு செய்கின்றார்களோ அவர்கள் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்.

வயித்துப் பசிக்கு சோறு கேட்கும் மக்களுக்கு தீர்வு ஒன்றும் சோறு தராது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். அதுதான் மக்களின் இன்றைய தேவை.
கடந்தவார பி.பி.சி தமிழோசையில் ஒரு பெரிய அப்பட்டமான பொய்யைக் கூறினீர்கள். மூன்று லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று மக்களை பார்வையிட்டீர்களா? எனக் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு தங்களின் பதில் நியாயம் அற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முகாம்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறுகின்றீர்கள் அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான யாழ்ப்பாண மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் பார்த்துவிட்டு அழுது கண்ணீர் வடித்தது எல்லாம் என்ன உங்கள் நாடகத்தில் ஒரங்கமா ?

எஸ்.விநோகாராதலிங்கம், சிவநாதன் கிஷோர் இவர்கள் யார்? இவர்களும் தேசிய கூட்டமைப்புத் தானே? முகாங்களுக்கு சென்று கண்ணீர் வடிப்பதால் என்ன பலன்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் செய்கின்ற உதவிகளைக்கூட உங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் செய்யமுடிவில்லை. சரி அவர் ஒரு அமைச்சர் செய்கின்றார் என நீங்கள் கூறலாம்.

அப்படியானால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள் சாப்பாட்டு பார்சல் தயார் செய்து கொடுக்கின்றார்கள். உங்களால் தவிக்கும் உள்ளங்களுக்கு தண்ணீர கூடக் கொடுக்க முடியவில்லையா?

அதில் வேடிக்கை என்னவென்றால் தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாகப் போராடியதாக் கூறுவது. புலிகளுடன் சேர்ந்து போராடியதின் பலன் மூன்று லட்சம் மக்களை முகாங்களுக்குள் வாட வழி வகுத்தது தான் உண்மை.
அப்படியானால் புலிகள் அழிக்கப்பட்டால் புலிகளால் அமைக்கப்பட்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தைத் தவறான தடத்தில் வழி நடத்தியதில் பங்காளியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் என்னவேலை?

தமிழர்களுக்கு அழிவை ஏற்படுத்தியவர்கள் வெளிப்படையான குற்றவாளிகள் என்றால், அதைத் தடுக்க வழிகள் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மறைமுகமான குற்றவாளிகளே!.

எனவே தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலில் சரியான முடிவுகளை எடுப்பார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது காரணம் தமிழர்கள் முப்பது வருடங்களாக பட்ட துன்பங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டார்கள். எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் உங்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள் அரசியலை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.

நன்றி
அன்புடன் .ஜெயக்குமார் (சோதி)
(இலங்கைநெட் இணையத்தளச் செய்தி)

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----