புதன், 13 ஜூன், 2007

இராமர் பாலம் என்பது கட்டுக்கதை

கட்டுரையாளர்: மறவன்புலவு க.சச்சிதானந்தன்

அறிவியல் பார்வைக்கு முன் உடைந்து நொருங்கும் கற்பனைக்கதைகள்
சேது சமுத்திரத் திட்டம் குறித்து கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு சிக்கல்களைச் சிலர் உருவாக்கி வருகின்றனர். இப்போது புதியதாக மதத்தின் பெயரால் ஒரு சிக்கலைக் கொண்டு வந்திருக்கின்றனர். இவர்களுடைய நோக்கம் சேதுக் கால்வாய் வந்துவிடக்கூடாது என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் பவளப்பாறைகள் என்றார்கள். இப்போது இராமர் பாலம் என்கிறார்கள்.

மன்னார் வளைகுடாவில் உள்ள நீளமான மணல் திட்டை அகழ்வுப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் இந்து அமைப்புகள், கட்சிகள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக இந்து அமைப்புகள் லக்னோ உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் தொடுத்து, அகழ்வுப் பணியை நிறுத்தி வைக்க முயற்சி செய்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்து விட்டது.

புராணங்கள், இதிகாசங்கள் கற்பனையானவை என்று தெரிந்திருந்தும் இராமர்பாலத்தைக் கட்டினார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் அறிவியல், புவியியல் ஆதாரங்கள் என்ன சொல்கின்றன? என்கிற கேள்வியைக் கடலியல் வல்லுநரும் ஐ.நா.வின் முன்னாள் ஆலோசகருமான மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது;

"ஆற்று முகத்துவாரத்தில் நீர்வாத்து குறைந்தகாலங்களில் திட்டுகள் ஏற்படுவதுண்டு. இது போன்று திட்டு ஆழம் குறைந்த கடலிலும் உருவாகின்றது. அந்த மாதிரியான ஒரு திட்டைத்தான் இராமர் பாலம் என்றும் மனிதன் கட்டினான் என்றும் கூறுகின்றனர். இந்தியாவையும் இலங்கையும் சந்திக்கும் மணல் திட்டுகள் தெற்கு, வடக்கு என இரண்டு இடத்தில் உள்ளன. தெற்கே உள்ள மணல் திட்டுகளை இராமர் கட்டினார் என்றால், வடக்கே உள்ள மணல் திட்டுகளை யார் கட்டியது?

ஆனாலும், இந்தச் சிக்கலை மேலோட்டமாகச் சொல்வது நன்றாக இருக்காது. அறிவியல் பூர்வமாகவும் புவியியல் அடிப்படையிலும் கூறினால் மட்டுமே மக்களுக்குப் புரியும்" என்றவர் மேலும் கூறியதாவது;

`சேது' என்பது வடமொழிச் சொல் என்று இதுவரை கூறிவருகின்றனர். அது முற்றிலும் தவறு. சங்க இலக்கியங்களான அகநானூறு 79-7, 394-6, நற்றிணை 213-4, 359-1, பெரும்பாணாற்றுப் படை 306 ஆகிய பாடல்களில் சேறு, மணல் ஆகியவை சேரும் இடத்தைச் சேது என்றும் அந்த மண்ணை ஆண்ட மன்னர்களையும் மக்களையும் சேர்வை என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே, சேது என்பது தமிழ்ச் சொல்லே.

இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இயற்கையாக மணல் சேருகின்ற தன்மையை அங்குள்ள மக்கள் சேர்வது என்று அழைத்து, பின்னர் சேது என்று அழைத்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு மணல்கள் சேர்வது, நீரும் நிலமும் கலக்கின்ற எல்லா இடங்களிலும் நிகழ்கின்ற இயல்பு. ஆற்றுநீரில் வண்டலாக சேறாக, மண்டியாக வருகின்ற மணல் நீரின் வேகத்தோடு ஓடிச் சென்றாலும் வேகம் குறைந்த ஓரங்களில் திடல்களாக அங்கு உருவாகும்.

நீர்வரத்துக் குறைந்த காலங்களில் உள்வளைவுகளிலும் சரிவுகளிலும் அருவியாகச் சொரியும் இடங்களின் முன்பு கடலோடு கலக்கின்ற நிலையிலும் மணல் சேர்ந்து திரண்டு, திரளாகி, திடலாகி, காட்சி தரும்.

ஆறுகளில் நீர்வரத்துக்குறைந்த காலங்களில் வெளி வளைவுகளில் நீரோட, உள் வளைவுகளில் மணல், சேறு திரண்டு திடல்களாகும். அதேபோல நீர்வரத்துக் குறைந்த காலங்களில் ஆற்றுமுகத்துவாரத்தில் மணல் சேர்ந்து திடலாகி இருக்கும்.

ஆற்றில் வெள்ளம் வந்தால் இந்தத் திடல்கள் கரைந்துவிடும். முகத்துவாரத்தில் வெளிப்பக்கத்தில் அகலமாகவும் நிலப்பகுதியில் கூம்பாகவும் இத்திடல் இருக்கும். மேடுகளுக்கும் செங்குத்தான பள்ளங்களுக்கும் உள்ள எல்லைகளில் இத்தகைய திடல்கள் அமைவது இயற்கை. இது ஒரு புவியியல் தன்மை, நீரியல் தன்மை மற்றும் சேற்றியல்தன்மை. இத்தகைய திடல் ஆற்றுமுகத்துவாரங்களிலும் தரவைக் கடல்களிலும் உருவாகின்றன. ஆழம் குறைந்த கடலே தரவைக் கடல் . ஆழம் அதிகமான கடல் நெடுங்கடல்.

நெடுங்கடலின் நடுவே நிலங்களை இணைக்கும் மேடைதரவைக் கடலாக அமைகின்ற புவியியல் தன்மையை உலகெங்கும் காணலாம். நீரிணை என இவற்றைப் பெயரிடுவர்.

சைபீரியா முனையையும் அலஸ்கா முனையையும் இணைப்பது பெரிங் நீரிணை.

தென் பாப்புவாவையும் வட அவுஸ்திரேலியாவையும் இணைப்பது டொரஸ் நீரிணை.

சுலவகாசி தீவையும் போணியோ தீவையும் இணைப்பது மக்காசா நீரிணை.

அரபுக்கடலின் நீட்டமான மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் இணைப்பது பாக்கு நீரிணை.

நில இடுக்குகளைப் போல நீரிணைகளும் உலகெங்கும் உள்ளன. இந்த நீரிணை மேடை விளிம்புகளில் எல்லைகளில் நெடுங்கடலைச் சந்திக்கும் இடத்தில் மணல் திடல்கள் அமைவது இயல்பு. அது பெரிங், டொரஸ், மக்காசா நீரிணையாக இருந்தால் என்ன? பாக்கு நீரிணையாக இருந்தால் என்ன? ஆழமற்ற மேடை ஆழமான கடலைச் சந்திக்கும் விளிம்பில் திடல்கள் அமையும்.

ஆறு கடலில் கலக்கும் போதும் சரி, கடல் மேல்மட்ட நீரோட்டம் தரவைக் கடலிலிருந்து ஆழ்கடலில் விழும்போதும் சரி கிளைகள் விட்டு பாயும்.

கங்கை, பிரம்மபுத்திரை வங்கக்கடலில் கலக்கும் சுந்தரவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் மணல் திடல்களைச் சுற்றி வளைந்து வளைந்து செல்கின்றன. அக்கடலிலும் கண்ட மேடைகளிலும் நகரும் தீவுகளே இருக்கின்றன.

அதேபோல தரவைக் கடலின் மேல்மட்ட நீரோட்டம் விளிம்பில் வழிந்து ஆழ்கடலில் கலக்கும்போது நகரும் மணல் திடல்கள் அமைகின்றன.

பாக்கு நீரிணையின் தெற்கு எல்லையான தலைமன்னார், தனுஷ்கோடி விளிம்பில் நூற்றுக்கணக்கான நகரும் மணல் திடல்கள் அமைந்திருக்கின்றன.

இந்த நகரும் திடல் ஒரு நாளைக்கு ஓர் இடத்தில் இருக்கும். மறுநாள் வேறொரு இடத்தில் இருக்கும். நீரோட்டம், சேற்று வெள்ளம், சுழிநீரின் வண்டற் கலக்கல் அளவு போன்ற பல்வேறு காரணங்களினால் முக்கோண வடிவான இத்திடல்களே நகரும் திடல்கள் ஆகின்றன.

இதேபோல, பாக்குநீரிணையின் வட விளிம்பான 45 கி.மீ. நீளமுள்ள கோடியக்கரை மாதகல்நீள் படுக்கையில் நகரும் திடல்கள் அமைந்திருக்கின்றன. அங்கேயும் தரவைக் கடல்விளிம்புக்கு அப்பால் சடுகையான செங்குத்தான ஆழம் வங்காள விரிகுடாவில் உண்டு.

வங்காள விரிகுடாவும் அரபிக்கடலும் எதிர் எதிர் பருவ நிலைகளைக் கொண்ட பூமியின் நடுக்கோட்டை ஒட்டிய கடல்கள். இந்தியப் பெருங்கடலின் நீட்டங்களான இந்த இரு கடல்களில் எதிர் எதிர் பருவக் காற்றுகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூர்மையடையும்.

கார்த்திகை, மார்கழி, தையில் வாடைக்காற்று வீசும். வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் வலசை நீரோட்டம் ஏற்படும். ஏறத்தாழ 3,000 மீற்றர்வரை ஆழமுள்ள கடல்களில் இந்த நீரோட்டத்தின் உந்துதல் நடு ஆழத்தில் கடுமையாக இருக்கும்.மேற்புறத்திலும் அடி ஆழத்திலும் நீரோட்ட உந்துதல் குறைவாக இருக்கும்.

கங்கையும் பிரம்மபுத்திரையும் ஐராவதியும் மகாநதியும் அடித்துத் தள்ளும் மலைச்சாரல், சேறும் மரமுறிவுகளும் குழைகளும் வங்கக் கடலில் கலந்து இந்த வலசை நீரோட்டத்துடன் இணைந்து சோழமண்டல கரை வழியாக மேற்பரப்பில் விரைந்து ஊர்ந்து பாக்கு நீரிணையை அடைந்து, இலங்கையின் மேற்குக்கரை வழியாக இந்துப் பெருங்கடலை நோக்கி வேகமாக மூன்று மாத காலங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும்.

மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் வலசை நீரோட்டத்தின் வேகம் படிப்படியாக குறைந்து அடங்கிவிடும். வங்கக்கடலானது குளம் போலவும் ஏரிபோலவும் மாறிவிடும். வைகாசி பிறந்தாலே எதிர் பருவமான இடசை நீரோட்டத்திற்கு அரபிக்கடலும் - வங்காள விரிகுடாவும் தயாராகி விடும். தென்றல் காற்று வீசும் காலம் தொடங்கும்.

ஆணி, ஆடி மாதங்களில் கிழக்கு ஆபிரிக்கக் கரையில் பிரியும் சோமாலி நீரோட்டத்தை ஆதாரமாகக் கொண்டு அரபிக் கடலில் கிளம்பும் இடசை நீரோட்டம் மன்னார் வளைகுடாவுக்கு புகுந்து பாக்குநீரிணை மேடைமேல் ஏறி கோடிக்கரை மாதகல் நீள்படுகையும் தாண்டிக் குதித்து வங்கக்கடலில் புகும்.

இலங்கையைச் சுற்றியும் அந்த நீரோட்டத்தின் பெரும் பகுதி நீர், வங்கக் கடலைக் கலக்கி சோழமண்டல கரை வழியாக மிதந்து ஊர்ந்து மியன்மாரைத் தொடும்.

இந்த எதிரெதிர் நீரோட்டங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முழுமையடைந்து அரபிக்கடலையும் வங்கக் கடலையும் கலக்கி வண்டலையும் சேற்றையும் பாக்கு நீரிணையின் மேற் பரப்பும் நீரோட்டத்துடன் கொணர்ந்து சேறாக்கி தங்க வைப்பதால், பாக்கு நீரிணையின் முதல் நிலை உற்பத்தி பெருகுகிறது. அவற்றை நம்பி சிறுமீன்கள் வளர, அவற்றை நம்பி பெருமீன்கள் வளர, சங்குகளும் முத்துகளும் சிப்பிகளும் சிங்கி இறால்களும் பிறவும் பெருமளவில் வளர்கின்றன.

பாக்குநீரிணை தரவைக் கடலில் பரந்துபட்ட மீன் உற்பத்திக்கு இந்த எதிரெதிர் நீரோட்டம் மூலமாக வரும் சேறும் வண்டலும்தான் வளம் ஊட்டுகின்றன.

இந்த எதிரெதிர் நீரோட்டத்தினால் வரக்கூடிய சேறும் வண்டலும் பாக்கு நீரிணையின் வட,தென் விளிம்புகளில் படிந்து சேர்ந்து திரண்டு நகரும் மணல் திடல்கள் ஆகின்றன. இந்தத் திடல்களுள் தெற்கில் உள்ளதை இராமர் பாலம் என்று சொல்கிறார்கள்.

இயற்கையாக நடைபெறும் நிகழ்வினால் ஏற்படும் திட்டுகளை அல்லது திடல்களை மனிதன் கட்டினான் என்று சொல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்? என்று கேள்வியை எழுப்பினார் மறவன் புலவு க.சச்சிதானந்தன்.

அவரிடம் நீங்கள் சொல்வதுபோல் இயற்கையாக ஏற்பட்ட மணல் திடல்களாகவே இருந்தாலும், அந்த திடல்களை தகர்ப்பதால் `சுனாமி' மாதிரியான பேராபத்துகள் வரும்போது, பாக்கு நீரிணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளாரே என்ற போது..

இரண்டு மீற்றர் நீளமுள்ள ஒரு சுவரில் 2 செ.மீற்றர் விட்ட வட்டமுள்ள ஒருதுளையால் அந்த இரண்டு மீற்றர் சுவருக்கு பாதிப்பு வருமா? இந்த இரண்டு செ.மீ. விட்ட வட்டமுள்ள துளை இருந்தால் தானே மின்சார கம்பியினை உட்செலுத்தி மின் இணைப்பு ஏற்படுத்த முடியும். அதோபோலத்தான் 31 கி. மீற்றர் நீளமுள்ள தலைமன்னார் , தனுஷ்கோடி சேதுதிடல்கள் . அதிலே 300 மீற்றர் அகலமான அகழ்வுப் பணி நடைபெற இருக்கிறது.

மொத்தமாகப் பார்க்கும் போது ஒரு விழுக்காடு அளவு தான். இதே மாதிரி எத்தனையோ இடைவெளிகள். அந்த 31 கி.மீற்றர் சேது திடல்களில் உள்ளன. அதனால் பாதிப்பு என்பது துளியும் இருக்காது. 2 மீட்டர் நீள சுவரில் 2 செ.மீ. துளை ஏற்படுத்துவதால் எந்தப் பாதிப்பும் வராது.

ஏதோ முழுத் தொடரை சேது திடல்கள் இடிப்பது போல் அல்லவா கூச்சலிடுகிறார்கள்.31 கி.மீட்டர் . அதில் பாதியளவு இலங்கை எல்லைக்குள் இருக்கின்றது. அதில் ஒரு விழுக்காடு இடைவெளி ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதில் எங்கிருந்து பாக்கு நீரிணைக்குப் பாதிப்பு வரப்போகிறது? கண்டிப்பாக வராது.

அடுத்ததாக, இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறார்கள். அகழ்வுப் பணியில் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. அதனால் அங்கே இருக்கும் கற்பாறைகள், பவளப் பாறைகள் சிதறிப் போய்விடும். தோரியம், மக்னீசியம் போன்ற கனிமவளங்கள் அழிந்து போய் விடும் என்று சொல்கிறார்கள்.

சேது சமுத்திர திட்டத்திற்காக மண் அகழ்கின்ற பணியைச் செய்யும் இடத்தில் மணலே பெருமளவில் இருக்கிறது. 30 அல்லது 40 மீற்றருக்குக் கீழே சுண்ணக்கற்களுடைய புவியியல் அமைப்பு கொண்டவை என்று இந்தியா - இலங்கை ஆழ்கடல் ஆராய்ச்சி கூடங்கள் உறுதி செய்கின்றன. அதனால் அங்கே பாறைகள் உடையும் என்ற நிலையே இல்லை.

இன்னொன்றையும் சொல்கிறார்கள். விண்வெளி கலத்திலிருந்து இந்தியா கடல்வெளியை நாசா எடுத்த ஒளிப்படத்தில் தனுஷ்கோடி கரையிலிருந்து தலைமன்னார் வரை நீளும் திட்டுகள் மனிதனால் கட்டப்பட்ட பாலம் இருப்பதாகவும் அது இராமர் கட்டிய பாலம் என்று அந்த நாசா அமைப்பு கூறியுள்ளதாகவும் கூச்சலிடுகின்றனர்.

இவர்கள் ஏன் நாசாவிடம் போக வேண்டும். இஸ்ரோ அமைப்பு படம் பிடித்திருக்கின்றனர். அவர்கள் இப்படி ஒரு கருத்தை கூறவில்லையே. ஆழம் குறைந்த கடலில் மணற்திட்டு தொடர்ந்து இருப்பதையே விண்வெளிப் படம் காட்டும் . அதற்கு மேல் அதற்கு விளக்கம் தருபவர் புவியியல் கடலியலயாளரோ , நாசாவோ இஸ்ரோவோ இல்லை.

சேது கால்வாய் அமைவதன் மூலமாக இந்திய நாட்டிற்குப் பயன் கிடைக்கும் . குறிப்பாக தமிழக கடற்கரையோர மக்களுக்கு வளம் சேரும்.

152 ஆண்டுகளுக்கு முன்பு சூயஸ் கால்வாய் அமைந்த பொழுது இன்றைய திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்ற நேரடியாகக் கூறினார்களா?

90 ஆண்டுகளுக்கு முன்பு பனாமா கால்வாய் உருவாக்கப்பட்டது. அங்கே அதற்குப் பக்கத்தில் அதே அளவில் இன்னொரு கால்வாயை மக்கள் விரும்புகின்றனர். காரணம் புதிய கால்வாய் உருவாக்குவதன் மூலம் அந்நிய நாட்டு ச் செலாவணியை பெருக்கிக் கொள்ள முடிகிறதாம். அண்டை நாட்டில் சுமுகமான வணிக உறவுகளை ஏற்படுத்த முடிகிறதாம். அதனால், அங்குள்ள மக்கள் இதே போன்ற கால்வாய்த் திட்டத்தை விரும்புகின்றனர்.

ஆனால், 145 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி தினக்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----