இலங்கையில் ஆயுதக் கலாசாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அரசாங்கம் தனது ஆழுமையை நாட்டின் பல திசைகளுக்கும் திரும்பி உள்ளது, இதில் ஓர் அம்சமாக இளைஞர்கள் மத்தியில் தொழில் வாய்ப்பை உருவாக்க முயல்கின்றது. அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டையாக எதிர்க்கட்சிகள் நடந்து கொள்வதனையும் ஊடகங்கள் மூலமாக அறியமுடிகின்றது. பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகாத அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் தராதரத்துக்கேற்ப கல்வியல் கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது, இதில் பயின்ற பல மாணாக்கர்கள் படிப்பை முடித்ததும் இலங்கைப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் பெறுகின்றார்கள்.
2009 ஆம் கல்வியாண்டுக்காக ஆங்கில மொழி மூல கற்றலுக்காக கல்வியல் கல்லூரிகளுக்குத் தெரிவாகிய வடக்கு கிழக்கு மாணவர்களில் அதிகமானோர் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள ஆங்கில மொழிமூல கல்வியல் கல்லூரிகளுக்கு பயிற்சிக்கென அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் களுத்துறை பஸ்துன்ரட்ட கல்வியற் கல்லூரிக்குத் தெரிவாகிச் சென்ற கனிஷ்ட மாணவர்களுக்கு இந்த வாரம் கொடுமையான பகிடிவதை ஆரம்பமாகியுள்ளது, ஆண் மாணாக்கர் பகுதிகளுக்கு நள்ளிரவில் முகத்தை துணியினால் மறைத்து வரும் சீனியர் என அழைக்கப்படும் சிரேஷ்ட மாணவர்கள் யூனியர் என அழைக்கப்படும் கனிஷ்ட மாணாக்கர்களை அழைத்துச் சென்று கொடுமையான பகிடிவதைகளைச் செய்து வருகின்றனர், இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு மாணவர்கள் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், பகிடிவதையென கொடுமையான சித்திரவதைக்குள்ளான மாணவர்களில் மூவர் படிப்பு வேண்டாம் என்று ஓடியுள்ளனர்.
இராணுவ முகாம்களில் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு ஒப்பானதாகவே இவ் வதைகள் இடம்பெறிவதனால், இராணுவத்தினரே வந்து தமிழ் மாணவர்களைச் சித்திரவதை செய்கின்றனரோவென எண்ணத் தோன்றுகின்றது, சிரேஷ்ட மாணவர்கள் எனச் சொல்லப்படுவோரில் அதிகமானோர் சிங்களவர்களாகும், சில தமிழ் சீனியர் மாணவர்கள் இருந்த போதிலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் உள்ளது.
உடைகளைக் கழற்றிவிட்டு தடிகளினாலும், விக்கட் பொல்லுக்களாலும், தாக்கியதில் ஒரு கனிஷ்ட மாணவனின் ஆணுறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது, அம் மாணவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படாமல் விடுதி அறையினுள் வைத்தே சிகிச்சை பெற்று வருகின்றார், இவ் விடுதியின் சுகாதாரமின்மையால் மாணவர்களுக்கு வயிற்றோட்டமும் ஏற்பட்டுள்ளது, வெளியே செல்ல கல்வியல் கல்லூரி மேலாளர்களினதும், சிரேஷ்ட மாணவர்களினதும் அனுமதி கிடைக்காமையால் உரிய மருத்துவமின்றி கனிஷ்ட மாணவர்கள் அவதியுறுகின்றனர்.
இக் கொடுமையினைக் கல்வியற் கல்லூரி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது, பகிடிவதை எனும் பெயரில் மனித சித்திரவதையை நடத்தும் இக் சிரேஷ்ட மாணவர்கள் எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக அனுப்பப்பட்டால் நாளைய சமுதாயத்தை எவ்வாறு உருவாக்குவார்கள். வேலியே பயிரை மேய்ந்த கதை போல அமையாமல் நல்ல சமுதாயம் உருவாக கல்வியல் சமூகம் கவனம் எடுக்க வேண்டும்.


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)