வியாழன், 18 செப்டம்பர், 2008

இரசாயன விஷ வாயு தாக்குதலும் மூச்சுத் திணறலும்!

வன்னி கிளிநொச்சியின் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதிகளில் தொடரும் ஸ்ரீலங்கா படைத்தரப்பினருடனான மூர்க்கத் தனமான சண்டையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிஎஸ் இரசாயன விஷ வாயு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும் இதனால் அக்கராயன் மோதலில் பங்குபற்றிய 6 இராணுவத்தினர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவ தரப்பு பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இரசாயன விஷ வாயுக்களைப் போரில் பாவிப்பது ஐ.நா. சட்ட போரியல் விதிகளுக்கு முரணானது என்பதால் இதனை முறியடிப்பதற்கு தேவையான சகல வழி முறைகளையும் பின்பற்ற ஸ்ரீலங்கா இராணுவம் தயாராக இருப்பதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவ தரப்புப் பேச்சாளர் உதய நாணயக்கார கூறிய கருத்துக்களை எடுத்து நோக்கினால், விஷ வாயு தாக்குதலை முறியடிக்கக் கூடிய வகையில் ஸ்ரீலங்கா படை தரப்பும் விஷ வாயுத் தாக்குதலை நடத்த தயாராகி விட்டது என்பது புலனாகின்றது.

சாட்சியமே இருக்க முடியாத அளவுக்கு வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புக்களை வன்னியில் இருந்து அகற்றிய நிலையில் ஸ்ரீலங்கா படைதரப்பு இரசாயன விஷ வாயு தாக்குதலுக்கு முகம் கொடுக்கத் தயாராகி விட்டோமென கூறுவது சிந்திக்கத் தோன்றுகின்றது.

விடுதலைப் புலிகள் இரசாயன விஷ வாயு ஆயுதத் தாக்குதலை நடாத்தினார்களா இல்லையா என்பது வெளிவராத நிலையில் இராணுவத்தினரின் இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களைக் கவலை கொள்ள வைக்கின்றது.

ஸ்ரீலங்கா இராணுவம் இரசாயன விஷ வாயு ஆயுதங்களை இப் போரில் பாவிக்கத் தொடங்கினால் இதில் அதிகமாகப் பாதிக்கப்படப் போவது அப்பாவிப் பொதுமக்களே என்பது உறுதி.

2 கருத்துகள்:

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.