புதன், 23 மே, 2007

பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்குக்கு புதிய கொடிகள் அறிமுகம்

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன - ராஜீவ்காந்தி இருவரும் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்து கைச்சாத்திட்டுக் கொண்ட பின்னர் இணைந்த வடகிழக்கு மாகாண சபை உருவானது. இம் மாகாண சபையானது ஸ்ரீலங்காவின் நிர்வாக அலகில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது, 1988ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணத்தை நிர்வகிக்க நடத்தப்பட்ட பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாணசபையைக் கைப்பற்றிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் (EPRLF) வடக்கு கிழக்கு நிர்வாகம் நடத்தப்பட்டது, அவ் வடக்கு கிழக்கு மாகாணசபை நிர்வாகத்துக்கென யாழும் மீனும் பொறிக்கப்பட்ட சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சையுடனான மூவர்ணக் கொடி உருவானது.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையானது சட்டரீதியானதல்லவென்று தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்க ஆளுமைக்கு உட்பட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து திருகோணமலையில் அமைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணசபை செயலகம் கலைக்கப்பட்டு தனித் தனி நிர்வாக சபை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு உருவாக்கப்பட்டன, அதனால் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு தனித் தனியான மாகாணக் கொடிகள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவின் 35வது குடியரசு தினமான நேற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான கொடிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் தனித் தனியாக இரு கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன. சிவப்பு, வெள்ளை, பச்சை வர்ணமுடைய வடமாகாணத்திற்கான கொடியில் சூரியன் பொறிக்கப்பட்டுள்ளது. பழுப்பு (Brown) வர்ணமுடைய கிழக்கு மாகாணக் கொடியில் கழுகு, மீன் மற்றும் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது.

2 கருத்துகள்:

  1. கொடியை பிரிச்ச மாதிரி நாட்டையும் பிரிச்சு விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.

    பதிலளிநீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள், வருகைக்கு நன்றி தமிழ்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.