செவ்வாய், 9 ஜூன், 2009

அரசுடன் நெருங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டப் பின் விடுதலைப் புலிகளினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் துணையை நாடியிருப்பதனை அறியக் கூடியதாக இருக்கின்றது.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் சிவநாதன் அண்மைக் காலமாக அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருவது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் களைகட்டியுள்ளன.

காங்கேசந்துறை நோக்கி செல்லவிருக்கும் யாழ்தேவி புகையிரத சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் வவுனியாவில் இருந்து தாண்டிகுளம் வரையான யாழ்தேவி வெள்ளோட்ட நிகழ்வில் அரசதரப்பு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுபிப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா அமைச்சர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் சிவநாதனும் சேர்ந்து தாண்டிக்குளத்தில் புகையிரதத்தை வரவேற்று நிகழ்ச்சி யொன்றினையும் நடாத்தினர், அதில் அதிதியாகக் கலந்து கொண்டு கிஷோர் சிறப்புரை நிகழ்த்தினார்.

தாண்டிக்குளத்தில் யாழ்தேவி புகையிரத வரவேற்பைத் தொடர்ந்து ஓமந்தையில் புதிய புகையிரத நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றது, இவ் அனைத்து நிகழ்வுகளிலும் திரு.கிஷோர் கலந்து கொண்டார்.

இன்று (09.06.2009) பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தினை நீடிக்கும் பிரேரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதற்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன, ஐக்கிய தேசியக் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரில் எட்டுப் பேர் கலந்து கொண்ட போதிலும் ஏழு பேரே எதிர்த்து வாக்களித்துள்ளனர், ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கிஷோர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்துள்ளார்.

இவை அனைத்தையும் உற்று நோக்கும் போது அரசாங்கத்துடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கிஷோர் செயற்படுவது புலனாகின்றது, எது எப்படியாகினும் விரைவில் அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

7 கருத்துகள்:

  1. ம்.... ஏதோ நடக்கட்டும் .... பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. என்ன முகுந்தன்,
    செய்தியை பார்க்கும் போது சிரிப்பாய் இல்ல...

    பதிலளிநீக்கு
  3. ஈழவா! எனக்கு சிரிப்பதற்கோ அல்லது அழுவதற்கோ சக்தியே இல்லை - அதுதான் நான் அடிக்கடி தந்தை செல்வாவின் தமிழ் மக்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற வரியை அடிக்கடி போட்டு வருகிறேன்! ஒரு காலத்தில் மற்றவர்களை நையாண்டி பண்ணிய குறிப்பாக தமிழர்களில் யாழ்ப்பாணத்தவர்கள் இன்று தாம் மோடர்களாக இருப்பதே பெரிய சோகம். இதை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அவரவர் மனச்சாட்சியைப் பற்றியதாகும். இதுதான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும்.

    பதிலளிநீக்கு
  4. கிஷோர் மட்டும் தானே...
    தமிழ்க் கூட்டமைப்பு நெருங்குவதாகக் கருத முடியாது தானே?
    அத்தோடு நான் அறிந்த வரை தமிழ்க் கூட்டமைப்ப நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிஷோர் மட்டும் தான் தன் பிரதேச மக்களுக்கு சேவை செய்தார். அத்தோடு வெளிப்படையாக அரசாங்கத்தை தாறுமாறாக விமர்சித்ததும் இல்லை.
    இனி எவ்வளவு காலம் தான் ஈழக் கோரிக்கையை வைத்து வாக்களித்த (அப்படி நடந்ததா தெரியவில்லை) மக்களை ஏமாற்றுவது?

    பதிலளிநீக்கு
  5. தமிழ்க்கூட்டமைப்பு கூட்டமைப்பாக இருக்கட்டும் முதலில்.புலிகளுக்கு புண்ணியம் கிடைக்குமென்றால் ஏதோ காரணத்திற்காகவேனும் தமிழ்கூட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பான குழுவாக பேணியதற்காக மட்டுமே.அந்த முதலிற்கே மோசம் வரும்போலிருக்கிறது

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் கனககோபி,

    தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.

    தங்களின் கருத்தில் ஒரு உண்மை இருக்கின்றது, கிஷோர் மட்டுமல்ல ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அரசாங்கத்துடன் உறவாடி வருகின்றனர் தான், ஆனால் கிஷோர் முன் கதவால் செல்கின்றார் மற்றயோர் பின் கதவால் செல்கின்றனர் என்பதே எதார்த்தம்.

    தமிழ் தேசிய கூட்டமைப்பில் எவரும் மக்களுக்கு சேவை செய்ததாக தகவல் ஏதும் இல்லை, மாறாக விடுதலைப் புலிகளுக்கு வக்காளத்து வாங்கினார்கள் என்பது சகலருக்கும் தெரிந்ததே!

    விடுதலைப் புலிகள் தமிழ் கூட்டமைப்பு எனும் போர்வையில் இவர்களை நிறுத்தியதனால் தான் இவர்களால் பாராளுமன்றம் செல்ல நேர்ந்தது, இல்லையேல் பாராளுமன்ற கதிரை என்பது இவர்களுக்கு கானல்நீராகவே இருந்திருக்கும்.

    மண்டையன் குழு தலைவராக இருந்து சுன்னாகம் முதல் வல்வெட்டித்துறை ஈறாக பல அப்பாவிகளை விடுதலைப் புலிகள் என நாமமிட்டு தலை கொய்த சுரேஸ் போன்றவர்களுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மிகப் பெரிய விருதல்லவா பா.உ எனும் சிம்மாசனம்.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சேரன்கிறிஸ்.

    விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கட்டியதற்குக் காரணம் சர்வதேச ரீதியில் தங்களுக்கு இருக்கும் பயங்கரவாத அமைப்பு எனும் அடையாளத்தை இல்லாமல் செய்வதற்காக, ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக இருந்ததற்குக் காரணம் விடுதலைப் புலிகள் மீதிருந்த பயத்தினால் தான்.

    இந்த தமிழ் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக எத்தனை தரம் சந்திப்புக்களை அல்லது பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் கலந்து கொண்டார்கள் என வினாவினால் விடை கேள்விக்குறியுடனே தொக்கி நிற்கும்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.