வியாழன், 28 ஆகஸ்ட், 2008

கருணாநிதி Vs நெடுமாறன்

தமிழ்நாட்டின் பத்திரிகைகளில் கருணாநிதி Vs நெடுமாறன் பட்டிமன்றம் தொடர்பான விடயங்கள் அலங்கரிக்கத் தொடங்கி விட்டன. "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்பது போல அரசியல்வாதிகள் சண்டை பிடித்தால் வாசகர்களுக்குத் தீனி தானே இதனால் வாசகர்களுக்கு நல்ல தீனி கிடைக்கவிருக்கின்றது, அதுமட்டுமல்லாமல் அரசியல் சகதி நாற்றமும் வெளியே வரப் போகின்றது.

கருணாநிதியைச் சாடி பழ.நெடுமாறனின் கட்டுரையும், பதிலாக கவி வடிவில் பழ.நெடுமாறனைச் சாடி கருணாநிதியும், இப்போது கருணாநிதியின் பொய்களுக்கு பதில் தருகின்றேனென பழ.நெடுமாறனின் அறிக்கையும் பத்திரிகைகளில் களைகட்டத் தொடங்கி விட்டன.

திரு.பழ.நெடுமாறன்:
காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார்.......

...........




கலைஞர்.மு.கருணாநிதி:

ஆழ்வார்கள் புராணம்
விடுதலைப் போர் நாயகராம்
விருதுநகர் மாவீரர் காமராஜரின்
விசுவாசமிக்க சீடர் என்று
விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்
வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்
விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!
அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று
கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்
முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றி விட்ட எட்டப்பன்!
குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க
குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென
தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;
தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!
வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

தரணிதனில் பல புராணங்கள் இருக்க
தசரதன் புராணத்தில் இவர் இறங்கி
அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு
விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!
சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!
கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை!


திரு.பழ.நெடுமாறன்:

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி. 1969-ஆம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும் நாடாளுமன்றத் தொகுதியல்ல இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.

அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.

1996-ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்த போது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவகவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

1983-ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி. பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வரவேண்டும்.

பட்டிமன்றம் தொடருமா காத்திருப்போம் !

3 கருத்துகள்:

  1. Why these old fellows fight. I think kalaignar should neglect these kind of things.

    பதிலளிநீக்கு
  2. இவர்கள் இருவருமே தங்களை பகுத்தறிவுவாதிகளாக காட்டி தந்தை பெரியாருக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நளன்.
    //இவர்கள் இருவருமே தங்களை பகுத்தறிவுவாதிகளாக காட்டி தந்தை பெரியாருக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.//
    அதிலும், தந்தை பெரியாரின் பெயரால் இருவரும் அரசியல் வியாபாரம் செய்கின்றார்கள் என்பது நிஜம்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.